திங்கள், 7 மார்ச், 2011

அமரர் கனகசபை சிவகுருநாதன்

இலங்கையில் வடமாகாணம், யாழ்ப்பாண மாவட்டத்தில் புலோப்பளையினைப் பிறப்பிடமாகக் கொண்ட அமரர் கனகசபை சிவகுருநாதன் ‘கசின்’ எனும் பெயரால் நன்கு அறியப்பட்ட பல்துறை எழுத்தாளரும், சமூக சேவையாளருமாவார்.  1920ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ஆம் திகதி புலோப்பளையில் கனகசபை சேதுப்பிள்ளை தம்பதியினருக்கு மகனாகப் பிறந்த இவர் க.வன்னியசிங்கம், பெ.நாகமுத்து, வ.சரஸ்வதி, பா. அன்னலட்சுமி ஆகியோரின் சகோதரராவார். சிவகுருநாதன் அவர்கள் தனது ஆரம்ப, இடைநிலைக் கல்வியினை உசன் இராமநாதன் கல்லூரி, அச்சுவேலி மத்திய மகாவித்தியாலயம், சாவக்கச்சேரி இந்துக் கல்லூரி ஆகியவற்றில் பெற்றார். 1940 ஆம் ஆண்டு திருநெல்வேலி ஆசிரியர் கலா சாலையில் ஆசிரியர் பயிற்சிக்காக சேர்ந்தார். அங்கு பண்டித மணி, சி.கணபதிப் பிள்ளை அவர்களின் வழிகாட்டலில் தமிழை நன்கு கற்றறிந்து 1943ஆம் ஆண்டு ஆசிரியராக வெளியேறி வவுனியாவில் கடமையாற்றினார்.

1950ஆம் ஆண்டில் பண்டிதர் பரீட்சை எழுதி அதில் சித்தியடைந்தார். அதன் பின்னர் செட்டிக்குளம், மன்னார், மத்துகம, கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் ஆசிரியப் பணி தொடர்ந்தது. அப்பகுதிகளில் அவரிடம் கல்வி கற்ற மாணவர்கள் இன்று உயர் பதவிகளில் இருப்பது அவரது சேவைக்கு எடுத்துக் காட்டாகும். 1971ஆம் ஆண்டு தொடக்கம் 1978ஆம் ஆண்டு சேவையிலிருந்து இளைப்பாறும்வரை உடுத்துறை மகாவித்தியா லயத்தின் அதிபராகக் கடமையாற்றினார். அக்காலப் பகுதியில் உடுத்துறை மகாவித்தியாலயம் பரீட்சைகளில் நல்ல பெறுபேற்றைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
 
‘கசின்’ சிவகுருநாதன் அவர்கள் சமூகப்பணி, இலக்கியப்பணி எனப் பல்வேறு துறைகளில் எமது சமூகத்திற்கு தொண்டாற்றினார். சாவகச்சேரி, சரசாலையில் வசிக்கும்போது இராமாவில் பிள்ளையார் கோவில் திருப்பணி, மட்டுவில் அம்மன் கோவில் திருப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அவர் வாழ்ந்த “நிதானபுரி” இல்லம் என்றும் அவ்வூர் மக்களால் நிறைந்து இருக்கும். இவரது சோதிடப் புலமையே இதற்குக் காரணமாகும். எதுவித பலனையும் எதிர்பாராது இல்லம் வரும் சகலருக்கும் விவாகப் பொருத்தம், பலன் சொல்வார். அந்தப் பணி பிற்காலத் தில் பம்பலப்பிட்டி அரச தொடர்மாடியில் வாழ்ந்த போதும் தொடர்ந்தது.

அதிபர் சேவையிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் தொண்ணூறுகளில் சில வருடங்கள் மன்னார் கேதீஸ்வரக் கோவலில் நிர்வாகப் பொறுப்பை ஏற்று திறன்பட நடத்தினார். இலங்கை இராணுவம் திருக்கேதீஸ்வரத்தை முற்றுகையிட்டபோது கோயிலில் கடமை புரிந்த ஊழியர்கள் எல்லோரும் வெளியேறி விட்ட நிலையில் கோவிலைப் பூட்டி இறுதியாக அங்கிருந்து வெளியேறியவர் சிவகுருநாதன் ஆவார். இறுதிக் காலத்தில் பம்பலப்பிட்டியில் வாழ்ந்தபோது கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அங்கு பால பண்டித வகுப்புகளில் இலவசமாக விரிவுரையாற்றினார். அவ்வகுப்புகளில் அரச சேவையில் பணியாற்றிய பலர் மாணவர்களாக விளங்கினார்கள். 1963ஆம் ஆண்டு கொழும்பில் கடமையாற்றியபோது இலங்கை கலை இலக்கிய பேரவையின் தலைவராக விளங்கினார். இவர் தலைவராக இருந்தபோது இலக்கியப் பேரவை பல இலக்கிய விழாக்களையும் இலக்கியக் கலந்துரையாடல்களையும் நடாத்தியமை குறிப்பிடத்தக்கது.
 
“கசின்” சிவகுருநாதனுடைய வாழ்க்கையில் அவர் ஆற்றிய ஆக்க இலக்கியப் பணி மிக உயர்ந்த இடத்தை வகிக்கின்றது. இவர் 1946ஆம் ஆண்டில் இலக்கியத்துறையில் காலடியெடுத்து வைத்துள்ளார். இவரின் கன்னியாக்கத்தை ஈழகேசரி பிரசுரித்துள்ளது. ஈழகேசரி உருவாக்கிய எழுத்தாளர்களில் ஒருவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
“கசின்” எனும் புனைப்பெயரில் முன்னைய இலக்கியத் தலை முறையினருக்கு நன்கு அறிமுகமான சிவகுருநாதன் ஆரம்ப காலங்களில் ஈழத்தில் அனைத்து பத்திரிகைகளிலும் நூற்றுக்கணக்கான ஆக்கங்களை எழுதியுள்ளார். சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் என முத்துறையிலும் “கசின்” அகலமாகவும், ஆழமாகவும் பாதம் பதித்திருந்தார்.
 
பண்டிதமணி கலாநிதி சி. கனபதிப்பிள்ளை அவர்களை என்றும் நினைவுகூர்ந்து வந்த இவரின் எழுத்துக்களில் பண்டித மணியின் சாயல்களை காணக்கூடியதாக இருக்கும்.  நகைச் சுவையுடன் எழுதி வந்த இவர் ஆனந்த விகடன் ஆசிரியர் தேவன் அவர்களை ஆக்க, இலக்கிய கர்த்தா என்ற வகையில் மானசீகமாக நேசித்து வந்தார்.
 
“கசின்” முதலில் ஒரு கட்டுரை ஆசிரியராகவே எழுத்துத்துறையில் பிரவேசித்துள்ளார். இலக்கியம் என்றால் என்ன?, தமிழ் ஆசிரியர் வரலாறு, பாட்டியின் ஆராய்ச்சி ஆகிய கட்டுரைகள் ஈழகேசரியில் வெளிவந்த நேரத்தில் இவருக்குப் பெரும் வரவேற்பினை பெற்றுக் கொடுத்துள்ளன. பின்னர் நாவலாசிரியராகவும், சிறுகதையாசிரியராகவும் பரிணமித்த போதிலும்கூட, இவர் கட்டுரைகள் எழுதுவதை நிறுத்திக் கொள்ளவில்லை. இலக்கியம் தொடர்பாகவும், கல்வியியல் தொடர்பாகவும் பல கட்;டுரைகளை இவர் எழுதியுள்ளார். அக்கால கட்டத்தில் கல்வி வெள்ளை அறிக்கை பற்றி சிந்தாமணியில் இவர் எழுதிய கட்டுரை கல்விமான்களிடையே பெரும் வரவேற்பினைப் பெற்றது. ஆய்வுக் கட்டுரைகளை “சட்டம்பியார்” என்ற புனைப் பெயரில் எழுதுவதை இவர் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

1947ஆம் ஆண்டில் கசினின் முதலாவது ஆக்க இலக்கியமான “வண்டியில் வளர்ந்த கதை” தொடர் நாவலாக ஈழகேசரியில் பிரசுரமானது. அந்நாவலில் அவர் கையாண்ட உத்தி காலத்தின் புதுமையானதாக சித்திரிக்கப்பட்டது. புகையிரதத்தில் சந்திக்கும் இருவர் ஒருவரை ஒருவர் அறிய முடியாமல் காதல் கடிதங்களை பத்திரிகை மூலம் பரிமாறிக் கொள்கின்றனர். கடிதம் மூலம் நாவலை வளர்த்து செல்வது ஒரு புதிய பரிணா மமாக இருந்தது.
 
இவர் பிற்காலத்தில் எழுதிய நாவல்களிலும் கடிதங்கள் மூலம் கதையை வளர்த்து செல்கின்ற பாணி நிறையவே காணப்பட்டதை அவதானிக்க முடிகின்றது. சகட யோகம், இராசமணிச் சகோதரிகள், இதய ஊற்று, தேடிவந்த செல்வம், கற்பகம், நிதானபுரி, சொந்தக்காரன், கண்டெடுத்த கடிதங்கள் என பல நாவல்களை இவர் எழுதியுள்ளார். இதன் மூலமாக ஈழத்து இலக்கியவானில் இவர் தனியிடம் பிடித்திருந்தார்.

நாவல் இலக்கியத்தைப் போலவே சிறுகதை இலக்கியத்திலும் இவர் புதுமைகளை சாதித்துள்ளார். மணியோசை, நூலும் நூற்கயிறும், இது காதலல்ல, பச்சைக் கிளி, பஞ்சும், நெருப்பும், சிலந்திவளை, தமிழன்தான், வனசஞ்சாரம், குந்து மாணிக்கம் என்பன இவரின் சிறுகதைகளுள் சிலவாகும். ஈழத் தமிழர்களின் பழக்க வழக்கங்கள், பேச்சுமுறை போன்றவற்றை இவரின் சிறுகதைகளில் நிறையவே காணமுடிந்தது. மண்வாசனை ததும்ப எழுதுவதில் “கசின்” தனித்துவமிக்கவராக விளங்கினார். நேர்மையான போக்கும், விசால உள்ளமும், நடுநிலைக் கொள்கையும் உடையவர்களிடமிருந்து தான் சிறந்த இலக்கியங்கள் தோன்ற முடியும்’ என்ற கருத்தில் “கசின்” பிடிவாதமாக இருந்தார். இலங்கையின் அனைத்து தேசிய பத்திரிகைகளிலும் போல இவரின் ஆக்கங்கள் பிரசுரமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவரது இலக்கியச் சேவையைப் பாராட்டி 1994ஆம் ஆண்டு இலக்கியப் பேரவை யாழ் மண்ணில் விழா எடுத்து மூத்த எழுத்தாளரான இவரைக் கௌரவித்தது. இவரது தமிழ்ப் புலமையைப் பாராட்டி கொழும்பு தமிழ்ச்சங்கம் 1999ஆம் ஆண்டு நடாத்திய புலவர், வித்துவான்கள் மாநாட்டில் இவருக்கு ``இயற்றமிழ் வித்தகர்’’ என பட்டமளித்து கௌரவித்தது. 2000ஆம் ஆண்டு இவரது இலக்கியப் பணிக்காக இலங்கை அரச கலாசாரத் திணைக்களம் ``கலாபூசணம்’’ விருது வழங்கி கௌரவித்தது.

1944ஆம் ஆண்டு சரசாலை கணக்கர் கனகசபை செல்லம்மா தம்பதியினரின் மகளான இராசம்மாவை கரம்பிடித்து இல்லற வாழ்க்கையில் பிரவேசித்த இவருக்கு ஐந்து பிள்ளைகள் உளர். அவர்களில் மூவர் ஆண்பிள்ளைகள். இருவர் பெண்பிள்ளைகள். மூத்த மகள் புஷ்பராணி. மூத்த மகன் புஷ்பநாதன். அடுத்த பிள்ளைகள் செல்வராணி, சபாநாதன், கேதீஸ்வரநாதன் ஆகியோராவர்.
 
2003ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் 13ஆம் திகதி இவர் எம்மைவிட்டு பிரிந்தாலும் இவரின் சமூக மற்றும் இலக்கிய சேவைகள் எம்மைவிட்டுப் பிரியாது. இவரின் பல படைப்புகள் நூலுருப் பெறாமல் இருக்கின்றன என அறிய முடிகின்றது. இருப்பினும் இவரது நூலுருவான சில படைப்புகளின் விபரம் வருமாறு:

நிதானபுரி
கசின் எழுதிய நான்கு குறுநாவல்களின் தொகுதி இதுவாகும். இத் தொகுதியில் நிதானபுரி, கற்பகம், சொந்தக்கால், தேடிவந்த செல்வம் ஆகிய  நான்கு குறுநாவல்கள் இடம்பெற்றுள்ளன. இத்தொகுதியின் முதற்பதிப்பு 1995ம் ஆண்டு டிசம்பரில் கொழும்பு சிற்றிசன் பிரின்டர்ஸ்ஸில் அச்சிடப்பட்டு சீ.சபாநாதன் அவர்களினால் வெளியிடப்பட்டது. இப்புத்தகம் 150 பக்கங்களைக் கொண்டது. 

காதலும் கடிதமும்.
இந்நூலில் வண்டியில் வளர்ந்த கதை, கண்டெடுத்த கடிதங்கள் ஆகிய இரண்டு கதைகள் பிரசுரமாகியுள்ளன. இவ்விரு கதைகளும் முறையே ஈழகேசரி, வீரகேசரியில் பிரசுரமானவையாகும். இத்தொகுதியின் முதற்பதிப்பு 1995ம் ஆண்டில் கொழும்பு சிற்றிசன் பிரின்டர்ஸ்ஸில் அச்சிடப்பட்டு சீ.சபாநாதன் அவர்களினால் வெளியிடப்பட்டது.

கசின் சிறுகதைகள்.
இந்நூல் யாழ். இலக்கியவட்டம் வெளியிடாக 1999 ஏப்ரல் மாதம் முதலாம் பதிப்பு வெளிவந்தது. இந்நூலினை பொ. ஆனந்த லிங்கம் என்பவர் தொகுத்திருந்தார். இந்நூலின் விலை 125 ரூபாவாகும். இந்நூலில் கசின் அவர்களினால் எழுதப்பட்ட 15 சிறுகதைகள் சேர்க்கப்பட்டுள்ளன.150 பக்கங்களைக் கொண்ட இத்தொகுதிக்கு கலாநிதி க. குணராசா அணிந்துரை வழங்கியிருந்தார். 

குமாரி இரஞ்சிதம்.
இந்நூல் கல்ஹின்னை தமிழ் மன்றத்தின் 95வது வெளியிடாக  முதற்பதிப்பு 2000ம் ஆண்டில் செப்டம்பர் மாதம் வெளிவந்தது. இது ஒரு நாவலாகும்.

சகடயோகம்.
இந்நூல் பம்பலப்பிட்டி சந்ரா வெளியீடாக முதற்பதிப்பு 2001ம் ஆண்டு ஜுன் மாதம்  வெளிவந்தது. இதுவும் ஒரு நாவலாகும்.    

கசின் நினைவலைகள். 
இந்நூல் கசின் அவர்களின்  வாழ்க்கைச் சுவடும் இலக்கியப் பதிவும்கொண்டதாக அமைந்துள்ளது. இந்நூலை பொ. ஆனந்தலிங்கம் தொகுத்துள்ளார். 

வெள்ளி, 4 மார்ச், 2011

சக்தி. அ. பாலஐயா

இலங்கையில் மத்திய மலையகத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட மூத்த கவிஞர், நலிவுற்ற மக்களின் ஏக்கத்துக்காக அரைநூற்றாண்டுக்கும் மேலாக வீச்சுமிக்க தமது எழுத்துக்களாலும், வீராந்த பேச்சுக்களாலும் சிறந்த பணியாற்றி வருபவர். கைதேர்ந்த ஓவியர். பல்கலைகளிலும் ஆற்றல் வாய்ந்த கலைஞராவார். கொழும்பு நுண்கலைக் கல்லூரியில் போதனாசிரியராகப் பணிபுரிந்து சிற்பம், சித்திரம், வண்ண வேலைகள் தொடர்பான துறைகளில் பல கலைஞர்களை உருவாக்கியவர். மும்மொழி வல்லுனர். சிறந்த மொழிபெயர்ப்பாளர் என பல்துறையிலும் புகழுக்குரிய சக்தி. அ. பாலஐயா இன்று நோய்வாய்ப் பட்ட நிலையில் இருந்தாலும் மலையக மக்கள் எழுச்சிக்கு பாடுபட்டவர்.

இலங்கையில் மத்திய மலையகத்தில் விஸ்வநாதர், இலக்குமி அம்மை தம்பதியினரின் புதல்வராக 1925ஆம் ஆண்டு ஜுலை 26 ஆந் திகதி நுவரெலியா மாவட்டத்தில் பிறந்தபால ஐயா தனது பத்தாவது வயதிலேயே ‘பாரதியின் தாக்கம்’ என்னும் தலைப்பில் தனது முதல் கவிதையை எழுதினார். காந்தி பக்தராகவும் கதராடை அணிபவராகவும், இந்திய விடுதலை இயக்கத்தில் பங்கு கொண்ட தலைவர்களின் ஆற்றல், பெருமை, தியாகம் ஆகியவை பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் மிக்கவராகவும் அந்தப் பத்து வயதிலேயே இவர் இருந்திருக்கின்றார் என்பது ஆச்சரியத்தைத் தருகின்றது.

பத்து வயதிலேயே பாட்டெழுதத் தொடங்கினாலும் அதை அவர் ஏனோ தொடரவில்லை. ஓர் ஓவியராகவே தன்னைத் தயார்படுத்திக் கொண்டு வந்தார். ஆனாலும், இவருக்குள்ளே ஒரு கவிஞன் உருவாகிக் கொண்டே இருந்தான்.

படிப்பை முடித்துக் கொண்ட சக்தி ஓர்  ஓவியராகவே தனது வாழ்வைத் தொடங்கினார். ஒரு Commercial Artist  ஆகத் தொழிலை மேற்கொண்ட இவர் ஒரு சில நூல்களுக்கும், சஞ்சிகைகளுக்கும் அட்டைப் பட ஓவியங்கள் வரைந்துள்ளார். வீரகேசரியின் ஆசிரியர் திரு. லோகநாதனின் சிறுகதைத் தொகுதி – சீ.வி. நடத்திய ‘கதை’ என்னும் சஞ்சிகை போன்றவைகளை சில உதாரணங்களாகக் குறிப்பிடலாம். இலங்கை அரசின் நுண்கலைக் கல்லூரியில் 1943 – 1944 ஆம் ஆண்டுகளில் கலை ஆசிரியராக பயிற்சி பெற்ற இவர், ஆங்கிலக்கலை ஆசிரியராகவும், விரிவுரையாளராகவும், ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கும் அரசாங்கக் கலைக் கல்லூரியில் விரிவுரையாளராகவும் 1951வரை பணிபுரிந்துள்ளார்.

‘Ceylon Teachers College’  மற்றும் ‘Hay Wood’s College Of Fine Arts’ ஆகிய கலைக் கூடங்களில் ஆசிரியராகவும், விரிவுரையாளராகவும் பணியாற்றிய சக்தியின் ஓவியக் கண்காட்சிகள் கொழும்பிலும் பிற இடங்களிலும் 1948 – 49 ஆம் ஆண்டுகளில் பிரசித்தம் பெற்றன. காலப்போக்கில் இவரது சிந்தனைகள் கவிதைக்கு வித்திட்டன. 1949க்குப் பின் வீராவேசம் கொண்ட இவருடைய கவிதைகளும், கட்டுரை இத்தியாதி எழுத்துக்களும் வீரகேசரி, தினகரன், சுதந்திரன், ஈழநாடு போன்ற ஏடுகளில் அடிக்கடி பிரசுரம் பெற்றன. கல்கி மற்றும் சி. என். அண்ணாத்துரை அவர்களின் திராவிட நாடு போன்ற தமிழக ஏடுகளிலும் சக்தியின் எழுத்துக்கள் இடம்பெற்றன.

ஓவியக் கலைஞர்கள் பற்றிய வரலாற்று கட்டுரைகளை யும்ää ஓவியங்கள் கூறும் தத்துவங்கள் பற்றியும் விரிவாக பத்திரிகைகளில் எழுதியுள்ளார். வீரகேசரி பத்திரிகையில் துணை ஆசிரியராகவும் ‘தமிழ் ஒலி’யின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இவரது சொந்த பத்திரிகையான “வளர்ச்சி” யில் 1956ம் ஆண்டில் எழுதிய எழுச்சிமிகு கட்டுரைகளை தமிழகத்தில் ‘திராவிட நாடு’ மறுபிரசுரஞ் செய்துள்ளது.

சமூக மறுமலர்ச்சி இயக்கம் என்பதன் ஒரு துணை விளைவாகவே ஆரம்பகால மலையக இலக்கியங்கள் தோன்றியிருக்கின்றன என்னும் உண்மை மலையக இலக்கியம் பற்றிய ஆரம்பத் தேடல்களில் ஈடுபட்டுள்ள அனைவருமே உணர்ந்துவரும் ஒரு முக்கியமான விடயமாகும்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலக் கோப்பித் தோட்டக் குடியேற்றத்திலிருந்து, பிந்திய தேயிலைத் தோட்டக் குடியேற்றக் காலத்திலிருந்தும் இத்தென்னிந்திய மக்கள், மலையகத் தொழிலாளர்கள் பட்டதுன்ப துயரங்களும் அனுபவித்த வேதனைகளும், பட்டாளத்துக் கட்டுப்பாடுகள் போன்ற வெள்ளைக்காரர்களின் இராணுவ அடக்கு முறைகளும் எழுத்திலடங்காதவைகள்.

தங்களின் சக்தி உணராமல், உழைப்பின் பயன் உணராமல் சோர்ந்தும் சோம்பியும் கிடந்த இவர்களைத் தட்டி எழுப்புவதையே குறிக்கோளாகக் கொண்டதாய்க் கிளம்பியதே மலையக இலக்கியம். இவ்வெழுத்து முயற்சிகளின் முன்னோடிகளாக விளங்கும் கோ. நடேசய்யர், சி.வி. வேலுப்பிள்ளை, கே. கணேஷ், சக்தி பாலையா போன்றவர்கள் சமகாலத்தவர்கள். இவர்களுடைய சிந்தனைகளும் ஒன்றாகவே இருந்திருக்கின்றன. இந்த மக்களின் விழிப்பு, விடிவு, சுதந்திரச் சமத்துவம் ஆகியவைகளே இவர்களுடைய எழுத்துப் பணிகளின் முனைப்பான அம்சங்களாக இருந்தன. ‘நடேசய்யரின் சாதனைகள்’ என்று நிறைய விஷயங்களை தனது கட்டுரைகள் மூலம் வெளியிட்டவர் மக்கள் கவிஞர் சி.வி.

சி. வி. க்கு பரவலான அறிமுகத்தினையும் ஏகோபித்த புகழையும் கொடுத்த ‘In Ceylons Tea Gardens’  எனும் ஆங்கிலக் கவிதை நூலை ‘தேயிலைத் தோட்டத்திலே’ என்று தமிழாக்கித் தந்தவர் கவிஞர் சக்தி .அ. பாலையா. இந்தத் தமிழாக்கம் வீரகேசரியில் தொடராகப் பிரசுரிக்கப்பட்டது. பிறகு செய்தி ரா.மு. நாகலிங்கம் அவர்களால் செய்தி பதிப்பகம் மூலம் நூலாக வெளியிடப்பட்டது. (ஆங்கில மூலம் 1954- மொழி பெயர்ப்பு 1969)

 ‘கவிஞர் சி.வி. வேலுப்பிள்ளை அவர்களின் கவிதைத் தொகுதியைத் தமிழாக்கும்போது கவிஞரவர்களின் உள்ளத்தையும் உணர்வையும், ஏழ்மையில் வாடும் மலையத் தொழிலாளர்களின் பால் அவர் கொண்டிருக்கும் பாசமும் பரிவும் அலைத்திரல்களாக எனது சிந்தனைகளைத் தழுவித் தொடர்ந்தன....

கவிஞரின் ஆங்கிலக் கவிதைகளைத் தமிழ்க் கவிதையாக்கும்போது அவரது மூலக் கருத்துணர்வில் கலந்திட விழைந்திருக்கின்றேன். கருத்தாழம் வழுவாதிருந்திடக் கவிஞரின் கவிதைகளில் ஊடுருவும் மலையக மக்களின் உணர்வாம் கருப் பொருளைத் தழுவியே தமிழ்க் கவிதைகளை தந்திட முயன்றிருக்கின்றேன்….|| என்று இந்த நூலுக்கான முன்னுரையில் சக்தி குறிப்பிட்டிருந்தாh.;

 1963ல் தினகரனின்  கலை மண்டலம் பகுதியில் ‘மேல் நாட்டு ஓவியர்கள்’ என்னும் தலைப்பில் பல ஆக்கங்களைப் படைத்துள்ளார். அதே காலகட்டத்தில் சுதந்திரனில்  மலை நாட்டு அறிஞர்கள்  என்னும் தலைப்பில் தொடர்ந்து பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.


 சக்தி பாலையா, தனிவழிக் கவிராயர், மலையரசன், லக்ஷ்மி ஆகிய புனைப் பெயர்களிலும் இவரது ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. இவர் தமிழ் ஒளி (1954) வளர்ச்சி (1956) ஆகிய சஞ்சிகைகளையும் வெளியிட்டுள்ளார். 1956ன் அரசியல் கெடுபிடிகள் பற்றி நாம் அறிந்ததே. சிங்களம் மட்டும் சட்டத்தின் மூலம் தமிழுரிமை  பறிக்கப்பட்டு சிங்களப் பேரினவாதம் முனைப்புப் பெற்ற காலம் அது. அரசின் பேரினவாதத்திற் கெதிராகவும் அரசியல்வாதிக ளையும்ää சிங்களத் தலைவர்களையும் நேர்மையான வழியில் நடக்கும் படியும் அறிவுறுத்துவதற்காக வென்றே சக்தி பாலையா அவர்கள் இந்தப் பத்திரிகையைத் தொடங்கி நடத்தினார். ‘வளர்ச்சி’ பத்திரிகையின் அன்றைய ஆசிரியத் தலையங்கங்கள் மிகவும் காத்திரமானதாகவும்ää காரசாரமானதாகவும் இருந்தன. அவற்றின் முக்கியம் கருதி அறிஞர் அண்ணாவின் “திராவிட நாடு” இத்தலையங்கங்களை மீள் பிரசுரம் செய்து வந்தது.

1948ல் இலங்கைக்குச் சுதந்திரம் கிடைத்தகையுடன் மலையக மக்களின் வாக்குரிமை மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து மலையகத் தலைவர்கள் நடத்திய சக்தியாக்கிரகத்தில் சக்தீயும் கலந்துகொண்டார்.

1956ன் சிங்களம் மட்டும் சட்டத்தை எதிர்த்து 1957ல் தமிழ்த் தலைவர்கள் நடத்திய எதிர்ப்புக் கூட்டங்களிலும் இவர் கலந்து கொண்டார். ‘மனோதத்துவமும் கலையும், போதனா முறையும்’ என்னும் பயிற்சி நூலினை 1952ஆம் ஆண்டு வெளியிட்டார்.

 ‘சொந்த நாட்டினிலே’ என்னும் தேசியப் பாடல்கள் அடங்கிய நூலினை மொழியுரிமைக்காக 1956ல் வெளியிட்டார். வீரகேசரியின் துணை ஆசிரியராகச் சில காலமும் சி.வி.யின் “மாவலி” சஞ்சிகையின் இணை ஆசிரியராகச் சிலகாலமும் பணிபுரிந்துள்ளார். 1960களின் ஆரம்பத்தில் ‘இந்திய வம்சாவழிப் பேரவை’ என்னும் அமைப்பினைத் தொடங்கி மலையக மக்களின் நிலைமைகளை இந்திய இலங்கை அரசினர்களுக்கு அறிவிப் பதன் மூலம் அவர்களின் பிரச்சினைகளுக்கான விடிவுகளைத் தேட ஒரு வழி சமைத்தார்.

1981ல் பஸ்ஸிலிருந்து விழுந்து ஒரு கோர விபத்துக்குள்ளானார் சக்தீ. அது பற்றி அவர் கூறுகையில், அவரது மன உறுதியும், வாழ்வின் மீதான அவரது திடமான நம்பிக்கையும், திண்மையும் புலனாகிறது.

    ‘நான் பஸ்ஸினடியில் கிடக்கின்றேன். நான் கிடப்பது பஸ் சாரதிக்குத் தெரியாது. இடது காலின் மேல் பஸ்ஸின் பின் சில்லு ஏறியபோது கால் எலும்புகள் கரகரவென நொறுங்கும் மெல்லிய ஓசை எனக்குத் தெளிவாகக் கேட்டது. சில்லு படிப்படியாக எனது முழங்கால், தொடை என்று ஏறி கத்த முடியவில்லை. சத்தம் வர மறுக்கிறது. அப்போது தான் யேசுநாதரின் கிருபையால் அது நடந்தது. யாரோ எனது நெஞ்சுக்குள் புகுந்து தொண்டை வழியாக வெளியேறி கத்து, கத்து என சத்தமிட்டார்கள். கத்தினேன். பஸ்ஸின் சில்லு அசையாமல் நின்றுவிட்டது. என்னை எப்படி வெளியே எடுத்தார்கள் என்ன செய்தார்கள். ஒன்றுமே தெரியவில்லை. ஆஸ்பத்திரியில் கிடந்தேன்.

    மாதக்கணக்கில் மருத்துவமனைக் கட்டில் பிறகு இரண்டு கால்களையும் முழங்காலுடன் வெட்டினால் தான் உயிர் பிழைப்பேன் என்றார்கள் டாக்டர்கள். இரண்டு கால்களையும் இழந்த பிறகு நான் எப்படி வாழ்வது. பிடிவாதமாக மறுத்து விட்டேன். மரணத்துடன் வருடக்கணக்கில் போராடி பலவிதமான சுய வைத்தியங்கள் செய்தேன்.

    பிறகு மெதுவாக ஊன்று கோல்களுடன் எழுந்து நடமாடினேன் என்று கூறும் சக்தீ இப்போது ஊன்றுகோலினையும் வீசி எறிந்துவிட்டு மிகவும் சாதாரணமாக எதுவுமே நடவாதது போல் மீண்டும் தனது வேலைகள், இலக்கியக் கூட்டங்கள் என்று உலாவருகின்றார்.
      இவரது கலை இலக்கியப் பணிகளுக்காக அரசாங்கம் கவிச்சுடர் பட்டமளித்துக் கௌரவித்தது (1987). தமிழ் ஒளிபட்டமும் விருதும் 1993ல் வழங்கப்பட்டது.  இலங்கை கம்பன் கழகம் 1998ஆம் ஆண்டு “மூதறிஞர்”; விருதளித்தது. கலாசார அமைச்சு ~~கலாபூஷணம்|| விருதும் வழங்கி இவரை கௌரவித்துள்ளது.

      தேசிய அருங்கலைச்சபை மற்றும் அரசின் மலையகக் கலாசார மேம்பாட்டுக்குழு ஆகியவற்றின் அங்கத்தவராக இருந்து கவிஞர் சக்தீ பணியாற்றி வருகின்றார். இவர் இதுவரை எழுதியுள்ள நூல்களாவன

•    மனோதத்துவமும் கலையும் போதனா முறையும் 1952
•    சொந்த நாட்டிலே – தேசிய கீத நூல் 1956
தேயிலைத் தோட்டத்திலே – மொழிபெயர்ப்புக் கவிதை நூல் 1969
•    சக்தீ பாலஐயா கவிதைகள் - துரை வெளியீடு 1998


இவருடைய முகவரி:-

SAKKTHIE BALA – IAH,
64 – 1/20, DAM STREET,
COLOMBO - 12