சனி, 1 ஜனவரி, 2011

கந்தப்பன் செல்லத்தம்பி (ஆரையூர் இளவல்)

கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு மாவட்டம், மட்டக்களப்பு தேர்தல் தொகுதி, மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவு, ஆரையம்பதி 01 கிராமசேவகர் வசத்தில் வசித்துவரும் ‘கந்தப்பன் செல்லத்தம்பி' அவர்கள் ஒரு மூத்த நாடகக் கலைஞரும்,  எழுத்தாளருமாவார்.

கணகதிப்பிள்ளை கந்தப்பன், வெள்ளையர் குறிஞ்சிப் பிள்ளை தம்பதியினரின் புதல்வராக 1935ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27ஆம் திகதி ஆரையம்பதி முதலாம் குறிச்சியில் பிறந்த ‘செல்லத்தம்பி' மட்டக்களப்பு ஆரையம்பதி ஆர்.கே.எம். வித்தியாலயத்தில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்றார். பின்பு மட்டக்களப்பு கோட்டைமுனை ரோமன் கத்தோலிக்க வித்தியாலயம், நுகேகொட திறந்த பல்கலைக்கழகம் ஆகியவற்றில் உயர்கல்வியைப் பெற்றார். தொழில் ரீதியாக 1952 தொடக்கம் 1963 வரை எழுதுவினைஞராக அம்பாறை நதிப் பள்ளத்தாக்கு அபிவிருத்தி சபையில் பணியாற்றிய இவர், 1963.02.01 முதல் 1996.03.27 வரை மூன்று தசாப்த காலங்களுக்கும் மேலாக கிராமசேவையாளராக (தரம் 01) பணியாற்றி பிரதேச மக்களின் நல்லபிப்பிராயத்துக்கு பாத்திரமானார். தற்போது கிராம சேவை அதிகாரி பதவியிலிருந்து ஓய்வுபெற்றுள்ளார். இவரின் அன்புப் பாரியார் தவமணிதேவி. இத்தம்பதியினருக்கு இளஞ்திருமாறன், இளஞ் செழியன், இளந்திரையன், இளங்குமரன், பங்கயற் செல்வி, தவச் செல்வி, தமிழ்ச் செல்வி, தாமரைச் செல்வி, தாரகைச் செல்வி ஆகிய அன்புச் செல்வங்களுளர். தமிழ்ச் செல்வி,  தாமரைச் செல்வி ஆகிய இரு புதல்விகளும் தந்தை வழியிலேயே இன்று நாடறிந்த கவிஞர்களாகவும்,  கலைஞர்களாகவும்,  எழுத்தாளர்களாகவும் சாதனை படைத்து வருகின்றார்கள்.

கலைத்துறை

1948ஆம் ஆண்டு முதல் மேடை நாடகங்கள்,  நாட்டுக் கூத்து, கிராமியக் கலைகள் என்ற அடிப்படையில் இவரது கலைப் பயணம் தொடர்கின்றது.

1948ஆம் ஆண்டு அரசடி மகாவித்தியாலய மண்டபத்தில் இவரால் எழுதி,  தயாரித்து, மேடையேற்றப்பட்ட ‘இராம இராச்சியம்' எனும் நாடகமே நாடகத்துறையில் இவரின் கன்னிப் படைப்பாகும். இதிலிருந்து (2007ஆம் ஆண்டு ஆரையம்பதி மகாவித்தியாலய அதிபரின் வேண்டுகோளுக்கமைய இவரால் எழுதி வழங்கப்பட்ட ‘பாடசாலையும் சமூகமும்' எனும் நாடகம் வரை) மொத்தம் 85 நாடகங்களை எழுதித் தயாரித்து மேடையேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த 85 நாடகங்களும் 1948 முதல் 2007 வரை 1008 தடவைகளுக்கு மேல் மேடையேற்றம் செய்யப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.  க. செல்லத்தம்பி ‘ஆரையூர் இளவல்' எனும் பெயரிலே அதிகளவில் நாடகப் பணியை ஆற்றியுள்ளார்.

இவரது நாடகங்களை பின்வரும் தலைப்புகளின் கீழ் பிரித்தாராயலாம்.

01.    புராதன நாடகங்கள்   
இவர் இதுவரை ஐந்து புராதன நாடகங்களை எழுதித் தயாரித்து மேடையேற்றியுள்ளார். விபரம் வருமாறு:
  •    சிவத்தைத் தேடும் சீலர்கள் (1953),
  •    குழந்தைக் குமரன் (1960),
  •    கற்பனை கடந்த ஜோதி (1963),
  •    வினைதீர்க்கும் விநாயகன் (1968),
  •    பிட்டுக்கு மண் (1970),

02.    இத்திகாச நாடகங்கள்
இவர் இதுவரை ஒன்பது இத்திகாச நாடகங்களை எழுதி தயாரித்து மேடையேற்றியுள்ளார். விபரம் வருமாறு:
  • இராம இராச்சியம் (1948), 
  • இதய கீதம் (1950), 
  • நீறு பூத்த நெருப்பு (1972), 
  • மானம் காத்த மாவீரன் (1972), 
  • நெஞ்சிருக்கும் வரை (1973), 
  • பார்த்தசாரதி (1974), 
  • பிறப்பின் உயிர்ப்பு (1974), 
  • பிறை சூடிய பெருமான் (1975),
  • தெய்வப் பிரசாதம் (1980)

03.    இலக்கிய நாடகங்கள்
இவர் இதுவரை நான்கு இலக்கிய நாடகங்களை எழுதி தயாரித்து மேடையேற்றியுள்ளார். விபரம் வருமாறு:
  • கலி கொண்ட காவலன் (1972), 
  • கொடை வள்ளல் குமணன் (1980),
  • உண்மையே உயர்த்தும் (1981), 
  • உலகத்தை வென்றவர்கள் (1982)

04.    வரலாற்று நாடகங்கள்
இவர் இதுவரை பதினொரு வரலாற்று நாடகங் களை எழுதி தயாரித்து மேடையேற்றியுள்ளார். விபரம் வருமாறு:
  • போர் புயல் (1966), 
  • இதுதான் முடிவா? (1967),
  • சிங்களத்து சிங்காரி (1969),
  • நிலவறையிலே… (1969),
  • விதியின் சதியால் (1970),
  • விதைத்ததை அறுப்பார்கள் (1970),
  • திரைச் சுவர் (1973),
  • கரைந்ததா உன் கல் நெஞ்சம் (1974),
  • தர்மம் காத்த தலைவன் (1976),
  • வெற்றித் திருமகன் (1976),
  • பட்டத்தரசி (1977),

05.    சமூக நாடகங்கள்
இவர் இதுவரை ஐம்பத்தாறு சமூக நாடகங்களை எழுதி தயாரித்து மேடையேற்றியுள்ளார். விபரம் வருமாறு:
  • அம்மாமிர்தம் (1948),
  • யாதும் ஊரே… (1948),
  • உயிருக்கு உயிராய்.. (1948),
  • நாலும் தெரிந்தவன் (1949),
  • எல்லோரும் நல்லவரே! (1951),
  • இதயக் கோயில் (1962),
  • வாழ்ந்தது போதுமா? (1962),
  • உன்னை உனக்கு தெரியுமா? (1963),
  • படித்தவன் (1963),
  • எல்லோரும் வாழ வேண்டும் (1963),
  • தா… தெய்யத் தோம் (1964),
  • சித்தமெல்லாம் சிவன் (1964),
  • குதூகலன் குஞ்சப்பர் - நகைச்சுவை (1964), 
  • கண்கள் செய்த குற்றம் (1965),
  • மகா சக்தி (1965),
  • கறி தின்னும் கறிகள் (1965),
  • பார்த்தால் பசி தீரும் (1966),
  • தாமரை பூக்காத் தடாகம் (1966),
  • வேலிக்குப் போட்ட முள் (1966),
  • பஞ்சாமிர்தம் (1967),
  • அடுத்த வீட்டு அக்கா (1968),
  • அது அப்படித்தான் - நகைச்சுவை (1968), 
  • ஆத்ம தரிசனம் (1968),
  • குருவிக் கூடுகள் (1969),
  • படைத்தவனைப் படைத்தவர்கள் (1970), 
  • வெற்றிலை மாலை (1970),
  • மாமியார் வீடு (1970),
  • பொழுது விடிஞ்சா தீபாவளி (1970),
  • தேடிவந்த தெய்வங்கள் (1970),
  • ஆறும் நாறும் (1971),
  • பொழுதலைக் கேணி (1971),
  • வேரில் பழுத்த பலா, (1973),
  • அந்த ஒரு விநாடி? (1974),
  • போடியார் வீட்டு பூவரசு (1974),
  • நெருஞ்சிப் பூக்கள் (1975),
  • குடும்பம் ஒரு கோயில் (1977),
  • இருளில் இருந்து விளக்கு (1977),
  • எல்லாம் உனக்காக (1978),
  • கடன்படு திரவியங்கள் (1978),
  • சொர்க்கத்தின் வாயிலில் நரகத்தின் நிழல்கள் (1980),
  • ஆனந்தக் கூத்தன் (1980),
  • மனமே மாமருந்து (1980),
  • மன்னிக்க வேண்டுகிறேன் (1981),
  • சேவை செய்தாலே வாழலாம் (1981), 
  • தெய்வங்கள் வாழும் பூமி (1982),
  • ஒற்றுமையே உயர்த்தும் ஏணி (1984),
  • தொடரா முறிகள் (1985),
  • கவலைகள் மறப்போம் கலைகளை வளர்ப்போம் (1986),
  • நம்பிக்கைதான் நல்வாழ்வு (1992),
  • நல்லவையே வல்லவை (1992),
  • உன்னுள் ஒருவன் (1993),
  • வேண்டாம்… வேண்டவே வேண்டாம் (1994), 
  • என்றென்றும் மலரவேண்டும் மனிதாபிமானம் (1995),
  • இறைகாக்கும் (1995),
  • பாடசாலையும் சமூகமும் (2007)
ஆரையூர் இளவலின் ‘மண் சுமந்த மகேசன்' (மாணிக்கவாச சுவாமிகளின் சரிதம்) சின்னத்திரை வீடியோ நாடகமாகும். இந்நாடகத்தின் உள் அரங்கக் காட்சிகள் மட்டக்களப்பு ஆரையம் பதியிலும், வெளிப்புறக் காட்சிகள் மண்முனைப் பிரதேசத்திலும் படம் பிடிக்கப்பட்டன. 1980ஆம் ஆண்டு 06 மாதம் 27ஆம் திகதி மாணிக்கவாசகர் சுவாமிகள் குருபூசை தினத்தன்று இந்நாடகம் முதலாவது காட்சிக்கு விடப்பட்டு தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் ஆலய அரங்குகளிலும், பொது அரங்குகளிலும் காட்சியாக்கப்பட்டது.

கிழக்கிலங்கையில் முதல் முயற்சியென போற்றப்படும் இந்த சின்னத்திரை வீடியோ நாடகத்தினை கதை, வசனம், பாடல்கள், நெறியாள்கை செய்தவர் ஆரையூர் இளவலே.

நாடகங்களை எழுதி தயாரித்து மேடையேற்றியுள்ள இவர் இதுவரை 12 நாடகங்களில் நடித்துமுள்ளார்.

" கஸ்டப்படுவோர் முகம் மலர
கவலைப்படுவோர் அகம் குளிர
கடிந்துவரும் இன்னல்களை
இன்பங்களாக மாற்றிப் பணி புரிவோம். "

எனும் நோக்குடன் கலைத்துறை சேவையாற்றி வரும் இவரின் ‘அலங்கார ரூபம்' (தென்மோடி) 1971'  ‘சுபத்திரா கல்யாணம்' (வடமோடி) 1972 ஆகிய நாட்டுக்கூத்துகள் மக்கள் மத்தியில் ஜனரஞ்சகத்தன்மை பெற்றது. இவ்விரு நாட்டுக்கூத்துப் பாடல்களும் 1974ஆம் ஆண்டில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தினால் ஒலிப்பதிவு செய்யப்பட்டு மூன்று முறை ஒலிபரப் பியமை குறிப்பிடத்தக்கது.

இலக்கியத்துறை

நாடகத்துறையைப் போலவே இலக்கியத்துறையிலும் இவர் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் புரிந்துள்ளார். இவரின் கன்னியாக்கம் ‘ஐந்து தலை நாகம்' எனும் தலைப்பில் 1952ம் ஆண்டு ‘சுதந்திரன்' பத்திரிகையில் பிரசுரமானது. அதிலிருந்து இதுவரை இருபத்தைந்து சிறுகதைகளுக்கு மேல் எழுதியுள்ள இவர், ஐம்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும், நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகளையும், இரண்டு நாவல்களையும் எழுதி யுள்ளார்.

அதேநேரம், மூவாயிரத்துக்கும் மேற்பட்ட சமய, இலக்கிய சொற்பொழிவுகளை நிகழ்த்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. செல்லத்தம்பி அவர்கள் ஆரையூர் இளவர், ஆரையூர் இறை யடியான் ஆகிய பெயர்களிலும் எழுதி வருகின்றார்.

இவர் இதுவரை இரண்டு நூல்களை எழுதி வெளியிட் டுள்ளார்.

01.     ‘விபுலானந்தர் வாழ்கின்றார்.'

புனித செபஸ்டியன் அச்சகத்தில் அச்சிடப்பட்ட இக் கவிதை நூல் ‘ஆரையம்பதி ஸ்ரீமுருகன் இந்துமன்ற' வெளியீடாக 1991.09.27ஆம் திகதி வெளிவந்தது. இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கவிதைகளும்  இசைவடிவில் பின்பு இருவட்டுக்களாகவும் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.

விபுலானந்தர் வாழ்கிறார் நூலுக்கு ஆசியுரை வழங்கி யுள்ள ‘ஸ்ரீராமகிருஸ்ண மிஸ்ன்' (இலங்கைக்கிளை), அருட்திரு. சுவாமி ஜீவனானந்த அடிகளார் அவர்கள் பின்வருமாறு குறிப்பிட் டிருந்தார்.

 “நம் ஈழமணித் திருநாடு அந்நியரின் ஆட்சிக்குட்பட்டு   நம்மவர்கள் அனைவரும் இருள் சூழ்ந்த வாழ்க்கை  வாழ்ந்த அண்மைக்காலத்தில் அவர்களுக்கு அறிவெனும்  சுடர் ஏற்றி ஒளிகொடுக்க வந்த பெருமக்களுள் ஒப்பற்றவர்         சுவாமி விபுலானந்த அடிகளாராவார்.

 சமூகத்திற்காக தமது வாழ்வை அர்ப்பணித்து சமூகத்தை  நன்னெறியில் இட்டுச் செல்லும் வெவ்வேறு பணிகளில்  பங்கெடுத்து சமூக மேம்பாட்டிலேயே கண்ணும் கருத்தும்  நிறைந்தவராக விளங்கிய சுவாமிகளை அன்னாரின்  பிறந்த நூற்றாண்டாகிய  இக்காலப் பகுதியில் கற்றோரும்,         இலங்கையில் ஆரையம்பதி, ஸ்ரீமுருகன் மன்றத்தினர்  அடிகளாரின் நினைவு எல்லோர் உள்ளத்திலும்   நிலைத்திட வேண்டும் எனும் பேரெண்ணத்துடன் கவிஞர் ‘ஆரையூர் இளவல்' சுவாமிகளின் நூற்றாண்டாகிய  இக்காலப் பகுதியில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் இவர்  இயற்றிப் பாடிய பாடல்களை ஒன்றாகத் தொகுத்து   “விபுலானந்தர் வாழ்கின்றார்' எனும் தலைப்பில் நூல்         வடிவில் வெளிக்கொணர முயன்று வருவதை அறிந்து         மகிழ்ச்சியடைகிறேன்.'

02.     நீறு பூத்த நெருப்பு 

புராணம், இத்திகாசம், சமூகம் ஆகிய மூன்று தர நாடகங் களின் தொகுப்பு நூல் இதுவாகும். 1996ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27ஆம் திகதி இந்நூலின் முதலாம் பதிப்பு வெளிவந்தது. மட்டக்களப்பு புனித வளவனார் கத்தோலிக்க அச்சகத்தில் அச்சிடப்பட்டு வெளிவந்த இந்நூல் அன்பு வெளியீடாகும்.

மேலும் ஐந்து நூல்களை விரைவில் வெளியிடக்கூடிய நடவடிக்கையை மேற் கொண்டுள்ளார் என்பது மகிழ்ச்சியைத் தரக்கூடிய ஒரு விடயம். அவை பின்வருமாறு:

01.    ‘இறை காக்கும்' (நாடகங்கள்) தொகுப்பு நூல்
02.    ‘கோடு கச்சேரி' (நாவல்)
03.    ‘மட்டக்களப்பு மாவட்டத்திலிருக்கும் கிராமங்கள்'
04.    ‘வாழ்ந்தது போதுமா?' (சிறுகதைகள் தொகுப்பு)
05.    ‘இனிக்கும் நினைவுகளே இங்கே வாருங்கள்' (வரலாறு).
(அறுபது ஆண்டுக்கலை இலக்கியப் பொதுப் பணிகளில் நெஞ்சம் நெகிழ்வித்த இனிய நல் நிகழ்வுகள்)

இவரின் இத்தகைய பணிகளை கௌரவித்து பல சுயேச்சை நிறுவனங்களும், அரச நிறுவனங்களும் பல்வேறுபட்ட விருதுகளை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஸ்ரீலங்கா அரசினால் வழங்கப்படும் உயரிய விருதான
 ‘கலாபூசணம்' விருது இவருக்கு 2007ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.     ஏழு தசாப்தங்களை கடந்த நிலையில் இன்னும் கலைத் தாய்க்கு கலைப்படைப்புக்களை வழங்கி வரும் ‘ஆரையூர் இளவல் க. செல்லத்தம்பி' தனது கலைத்துறை ஈடுபாட்டுக்கு காரணகர்த்தாக்களாக இருந்தவர்கள் என்ற அடிப்படையில் சுவாமி விபுலானந்த அடிகளாரையும், மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையின் சிரேஸ்ட விரிவுரையாளர் பண்டிதர் செ. பூபால பிள்ளை அவர்களையும், மூத்த எழுத்தாளரும், முன்னாள் மட்டக் களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் இரா. நாகலிங்கம் அவர்களையும் இன்றும் அன்புடன் நினைவுகூர்ந்து வரும் இவரின் முகவரி:-

K. SELLATHAMBY
THAVAPATHY
ARAYAMPATHY 01,
BATTICALOLA.

5 கருத்துகள்:

  1. மிக நல்ல முயற்சி புன்னியாமீன். ஒரு மூத்த கலைஞரை சிறப்பாக அறிமுகப்படுத்தியுள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் கந்தப்பன் அவர்களைக் குறித்த அறிமுகம் நன்று. அறியாத மூத்த அறிஞரை அறிமுகப்படுத்தியதில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  3. அற்புதமான.. அவசியமான முயற்சி இது. உங்களது இந்த சேவை நாளைய வரலாற்றில் இடம் பெறும். உங்களுக்கு என் இதயம்கனிந்த வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு