வியாழன், 9 பிப்ரவரி, 2012

‘Puniyameen’ Sets new record - By N.M.Ameen

Kalabhushana P.M. ‘Puniyameen’ a native of udathalawinna in the district of Kandy has created a new record by writing 7,500 articles to an electronic media within one year. This record was made in the Tamil Wikipedia from 14 November 2010 to 13 November 2011.

A final year student at the Sabaragamuwa University M.I.F. Nafeela in a research report published in the ‘Tamil Journalist’ website states that the articles written by Puniyameen appear in 183 websites the world over. She has also quoted the addresses of all 183 websites.

From the latter part of last year Puniyameen had a close connection with wikipedia which is published in 282 languages, and has the first highest access/readership in the world. He joined Tamil wikipedia on 14 November 2010 and introduced the writers, journalists, historians and artists. He had also registered the books writted by various authors pertaining to politics, economics, history and arts. Now he has commenced writing about world cricketers, in addition to writing about Tamil – Muslim writers in India, Malaysia, Singapore and Myanmar and the magazines published by them.

‘Puniyameen’ who commenced his literary work in 1970 has authored and published 179 books i.e. Novel – 01, Short Stories – 07, Poetry – 03, Political Science – 14, Political Review – 07, Literary Review – 21, General knowledge – 10, History – 08, Various Fields – 07 and fifth standard scholarship books. He has also co-authored 101 books with his wife Maseeda Puniyameen.
In addition he has written 166 Short Storiers and over 15,000 articles on arts, literature, politics, sports and society.

During the past he has written various Tamil magazines and news papers in SriLanka and India. Now he has commenced writing in the electronic media.
Ceylon Today - 12 January 2012 (Page No:02)

[edit] A barnstar for you!

வியாழன், 17 நவம்பர், 2011

தமிழ் விக்கிப்பீடியா ஊடகப் போட்டி

தமிழ் விக்கிப்பீடியா ஊடகப் போட்டி

தமிழ் விக்கிப்பீடியா ஊடகப் போட்டி ஒன்றை நடத்துகிறது. இதில் பங்கேற்போர் தமிழ்-தமிழர் தொடர்புடைய புகைப்படங்கள், ஒலிக் கோப்புகள், ஒளிக் கோப்புகள், அசைப்படங்கள், வரைபடங்கள் ஆகியவற்றைப் பதிவேற்றலாம். போட்டிக்காகப் பதிவேற்றும் கோப்புகள் பங்கேற்பாளரது சொந்தப் படைப்புகளாக இருக்க வேண்டும். 

இப்போட்டியின் மொத்தப் பரிசுத் தொகை 850 அமெரிக்க டாலர்கள். இப்போட்டியில்
முதல் பரிசாக 200 டாலர்கள்
இரண்டாம் பரிசாக 100 டாலர்கள், 
மூன்றாம் பரிசாக 50 டாலர்கள் 

என பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளன. ஆறுதல் பரிசாக 25 டாலர் வீதம் இரண்டு பரிசுகளும் வழங்கப்பட உள்ளன. 

இவை தவிர தொடர்ச்சியாகப் பங்களிப்போருக்காக 100 டாலர் வீதம் மூன்று சிறப்புப் பரிசுகளும், தமிழர் தொழிற்கலைகளைப் பற்றிய சிறந்த ஊடகக் கோப்புக்காக 150 டாலர் சிறப்புப் பரிசாகவும் வழங்கப்பட உள்ளன.

போட்டி நவம்பர் 15, 2011 முதல் பெப்ரவரி 29, 2012 வரை நடைபெறும். போட்டியில் பங்கேற்க விரும்புவோர்
 
என்ற இணைய முகவரிக்குச் சென்று முழு விபரங்களையும் அறிந்து கொள்ளலாம். 

போட்டி பற்றிய சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை tamil.wikipedia@gmail.comtamil.wikipedia@gmail.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

- பாலா ஜெயராமன்ஒருங்கிணைப்பாளர், தமிழ் விக்கி ஊடகப் போட்டி

வியாழன், 26 மே, 2011

கவிஞர் பொத்துவில் அஸ்மின்

இலங்கையின் கிழக்கு மாகாணம் பொத்துவிலைச் சேர்ந்த கவிஞர் அஸ்மின் ஈழத்தில் மரபுக் கவிதை எழுதி வரும் இளம் கவிஞர்களுள் முக்கிய கவிஞராகவும், பாடலாசிரியராகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் அறியப்பட்டு வருகின்றார். விடை தேடும் வினாக்கள்(2002) விடியலின் ராகங்கள்(2003)எனும் மகுடத்தில் இதுவரை இரண்டு கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார்.''ரத்தம் இல்லாத யுத்தம்''(கவிதை), ''ஈழநிலாவின் உணர்வுகள்''(பத்தி எழுத்து) ஆகிய நூல்கள் மிக விரைவில் வெளிவர இருக்கின்றன. சக்தி TVயினால் நடாத்தப்பட்ட'இசை இளவரசர்கள்'போட்டி நிகழ்ச்சி மூலம் பாடலாசிரியராக அறிமுகமான இவர், தேசியமட்ட கவிதைப் போட்டிகளில் கலந்து கொண்டு ''ஜனாதிபதி விருது''(2001),பேராதனை பல்கலைக்கழகத்தின் ''தங்கப் பதக்கம்'' (2003)
சிறந்த பாடலாசிரியருக்கான விருது 2010 உட்பட எட்டு விருதுகளை பெற்றுள்ளார். பேசாத கண்ணும் பேசுமே, காதல் டொட் கொம், கோடம்பாக்கம் ஆகிய திரைப்படங்களைத் தயாரித்த கே.செவ்வேளின் தயாரிப்பில் இயக்குனர் கேசவராஜின் இயக்கத்தில் வெளிவரவுள்ள ''பனைமரக்காடு'' தமிழ் திரைப்படத்தில் பாடல்களை எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மலேசியாவில்  நடைபெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில்  22. 5. 2011 அன்று கவிக்கோ அப்துல்ரஹ்மான் தலைமையில் இடம்பெற்ற கவியரங்கில் வாசிக்கப்பட்டு பார்வையாளர்களதும்,  பேராளர்களினதும், அதிதிகளதும் பாராட்டினை பெற்ற கவிதை.

கவிஞர் பொத்துவில் அஸ்மின்.
  
இறைவாழ்த்து

உலகக் கவியரங்கில் உயர்வாய் கவிபடைக்க
அழகுக் கவிதருவாய் ஆண்டவனே!-நபியருளால்
கோலாலம் பூரில் கூடிநிற்கும் சான்றோர் முன்
வீழாத செந்தமிழை தா.

தமிழ் வாழ்த்து

அண்ணல் நபியிடத்தில் ஆழ்கடல்போல் இருந்திட்ட
கன்னல் குணத்தில் சிறுதுளியை சிந்தவந்தேன் -இன்னுமேன்
மறைவாக இருக்கின்றாய் மணித்தமிழே? அவன்துணையால்
விரைவாக என்முன்னே வா.!

அவையடக்கம்.

நெற்பதர்நான் எனைக்கவிதை
நெய்துபடி என்றார்கள்
கற்கண்டு சொற்கொண்டு
கவிபாடும் புலவர்முன்
முட்புதர்நான் முஹம்மதெனும்
முழுநிலவை பாடுவதா..?

அற்பன்நான் கற்பனையில்
ஆழ்ந்தபடி யோசித்தேன்.
விக்கித்தேன் எனக்குள்ளே
விடைகேட்டு வினாத்தொடுத்தேன்…
துக்கித்தேன் பலநாட்கள்
துயரத்தில் உயிர்துடித்தேன்.

கத்தியிலே நடக்கின்ற
காலம்தனை மறந்துவிட்டு
புத்தியினை உலகத்தின்
புதைகுழிக்குள் செலுத்தியதால்
நித்திரையை தொலைத்துவிட்டு
நித்தம்நான் தவித்திருந்தேன்.

அல்லாஹ்வை நேசித்தால்
அண்ணலினை சுவாசித்தால்
பொல்லாத கோடையிலும்
பொசுக்கென்று மழைவருமே…
எனவே நான் சிந்தித்தேன்
என்னைநான் நிந்தித்தேன்

வல்லோனை தொழுது ஒரு
வழிசொல்லு என்றழுதேன்….
பொறுமையாய் இருந்தேன்
பொங்கியது சங்கத்தேன்….!-இங்கே
தங்கத்தேன் கொட்டுவோர் முன்-இதை
தந்துநான் தப்பித்தேன்…!!

கவியரங்கத் தலைவருக்கு.

தேமாங்காய் பூமாங்காய் ஒரு மண்ணும் விளங்காமல்
தெம்மாங்காய் பாடுகிறேன் பாட்டு-கவிக்கோவே!
நான்பாடும் பாட்டை நானறியேன் பெருங்கவியே
கூனுண்டோ ஆயந்துநீர் கூறும்.

கிறுக்கும் கவியெல்லாம் கீழென்று வளர்கவியை
நறுக்கி பின்னவரே நாறுகின்றார்-திருக்கவியே!
நொறுக்கி என்நெஞ்சில் நோக்காடு தந்தோர்முன்
சருகல்ல இவனென்று சாற்றும்

அழகுத்தமிழ் கவியின் ஆற்றலினை உணராதோர்
மிளகாய் போல்மரபை நினைக்கின்றார்-விலகாமல்
பழகும் தமிழ்மொழியில் மரபுத்தாய் மாண்புகளை
உலகுக்கு சொல்வேன் உணர்ந்து.

அண்ணலாரின் அழகிய குணங்கள்
பொறுமை.

வாவியை கடப்ப தென்றால்
வள்ளமொன் றிருந்தால் போதும்..
ஓவியம் வரைவ தற்கு
ஓரிரு வரைகள் போதும்
ஆவியை ஆட்சி செய்யும்
அரசரை  மக்கள் நெஞ்சை
கூவியே விழிக்கச் செய்த
குயிலினை குறைஷிப்பூவை
காவியம் பாடு தற்கு
காலம்நாள் போதாதெனவே…
தீவினை ஓடச் செய்து
தீனினை ஒளிரச் செய்ய
நோவினை பொறுத்த எங்கள்
‘கோ’வினை நபிகள் என்னும்;
பூவினை பற்றித்தான்யான்
பாவினை ஏந்தி வந்தேன்..
மேவிய தகைமை மிக்க
மேதைகாள் வளருமெந்தன்
பாவிலே குறைகள் காணிண்
பாவியை மன்னியுங்கள்.
காவியாய் இருந்த நெஞ்சை
கவிதை போல் வெண்மையாக்கி
சாவியாய் தொழுகை தந்த
சத்திய புருஷர் நாமம்
நாவினால் நவின்றால் கூட
நரம்பெலாம் கலிமாச்; சொல்லும்.
லாயிலாஹ இல்லல்லாஹ்
முஹம்மதுர் ரஸலுல்லாஹ்
எல்லாப் புகழும் உருவில்லா
இறைவனுக்கே அல்ஹம்துலில்லாஹ்!!
      
* (வேறு)
சிறுமையாய் இருந்த எம்மை
சீர்பெற செய்த செம்மல்
எருமையாய் நடந்த எம்முள்
ஏகனை நுழைத்த ஏந்தல்
கருமையாய் இருந்த உலகை
வெண்மையாய் செய்த வேந்தர்
வறுமையாய் வாழ்ந்த போதும்
வள்ளலாய் இருந்த அண்ணல்
மறுமையில் எமக்காய் பேசும்
மாநபி சுவனத் தென்றல்.
பெருமையாய் வாழாதந்த
பொறுமையின் சிகரம் பற்றி
அருமையாய் கவிதை சொல்வேன்
பொறுமையாய் இருந்து கேட்பீர்..!!

எண்சீர் விருத்தம்.

நெறிகெட்ட காபிர்கள் மக்காவெங்கும்
நெருப்போடு இணைவைத்து வணங்கும்வேளை
தறிகெட்டோர் வெறிகொண்டு கஃபாவெங்கும்
தங்கத்தால் சிலைவைத்து களிக்கும்வேளை
புரியாத மாந்தர்கள் நபிகள் நெஞ்சை
புண்ணாக்கி பழியுரைகள் கூறும் வேளை
அறியாமை இருள்விலக இஸ்லாம் மார்க்கம்
அண்ணலார் பொறுமையினால் தளைக்கலாச்சு!

கருணைமிகு எம்பெருமான் மக்கா நகரில்
காலாற அவ்வேளை நடந்து வந்தார்.
தெருவழியே ஒருகிழவி தலையில் மூட்டை
சுமந்தபடி முனகலுடன் முன்னே வந்தாள்.
கிறுகிறுப்பு தரும்வெயிலில் நடந்துவந்த
கிழவியவள் நிலைகண்டு முன்னே சென்ற
திருநபியோ ‘என்தாயே உங்கள் சுமையை
நான்தலையில் சுமக்கின்றேன் தருவீர’; என்றார்;

‘இல்லைநான் தொலைதூரம் செல்லவேண்டும்
வீண்சிரமம் உமக்கெதற்கு’ விலகுமென்றாள்.
வெள்ளைமனம் உள்ள நபி அவளைப் பார்த்து
வெகுதூரம் சென்றாலும் வருவே னுங்கள்
பிள்ளைபோல் எனை எண்ணி தருவீரென்று
    பிரியமுடன் அவளிடத்தில் கேட்டுநின்றார்
சுள்ளென்ற வெயில்பொழுதில் நபிகள் தலையில்
    சுமைஏற்றி அவள்பின்னே நடக்கலானாள்…!

‘தள்ளாடும் இவ்வயதில் நீங்க ளுங்கள்
    தாய்மண்ணை விட்டுஏன் போகின்றீர்கள்..
பிள்ளைகள் உள்ளனரா அங்கு?’ என்;று
    தொலைதூரம் சென்றநபி வினவலானார்.

‘பொல்லாத ஒருகொடியோன் எங்கள் முன்னோர்
   வணங்கிவரும் தெய்வமெலாம் பொய்என்கின்றான்
‘அல்லாஹ்’வை வணங்கட்டாம் என்று சொல்லி
   ஆத்திரத்தை கிளப்பு கிறான் அதனால் போறேன்’


‘கல்லெடுத்து அவன் தலையை உடைக்கும் சக்தி
   கடுகளவும் எனக்கில்லை அதனால் போறேன்.
கொள்ளையிலே போகட்டும் ‘முஹம்மத்’ என்னை
   கொன்றாலும் அவன்பேச்சை கேட்கமாட்டேன்.
எல்லோரும் அவன் வழியில் போனால் கூட
   ஒருபோதும் அவன்வழியில் போகமாட்டேன்.
நில்லேன்நான்  அவனில்லா ஊரை நோக்கி
    நிம்மதியை தேடித்தான்; போறேன் என்றாள்.’

வறுமைப்பூ தன்வாழ்வில் பூத்தபோதும்
    வயிற்றினிலே கல்சுமந்து நின்றமன்னர்.
பொறுமையினை எளிமையினை நேர்மைதன்னை
    பொக்கிஷமாய் வைத்திருக்கும் எங்கள்தூதர்.

அருமைநபி ‘அல்லாஹ்’வின் அருளினாலே
    அருங்குணங்கள் அத்தனையும் கொண்ட அண்ணல்.
சிறுமையுடன் அவள்சொன்ன பேச்சை கேட்டு
   சிறிதளவும் கோபமின்றி தொடர்ந்து சென்றார்.

கேவலமாய் ஒருவர் எமை கேலிசெய்தால்
  கேட்டிருந்து ரசிப்போமா உடனேபேசும்
நாவறுத்து அவர்கையில் கொடுத்துவிட்டு
   நம்சக்தி என்னவென்று காட்டுவோமா?
சாபமிட்ட கிழவியவள் சுமையைத் தூக்கி
   சாந்திநபி சாந்தமுடன் செல்லுகின்றார்.
கோபமென்ற சொல்கூட அறியா தந்த
   கோமகனின் பொறுமையினை என்னவென்பேன்.

செல்லுமிடம் சேர்ந்ததனால் தலையின் சுமையை
   வள்ளல்மனம் உள்ளநபி இறக்கி வைத்து
‘நல்லபடி வந்துவிட்டோம் மகிழ்ச்சி ‘உம்மா’
   நான்சென்று வருகின்றேன்’ என்றார் பணிவாய்.
‘எல்லையற்ற பேரன்பு உள்ளம் கொண்ட
   பிள்ளைநீர் யாரென்று’ கிழவி கேட்டாள்.
அல்லல்தரும் கொடியவனாய்  நீங்கள் சொன்ன
   பொல்லாத நபிமுஹம்மது நான்தான் என்றார்.


சங்கைமிக்க நபிபெருமான் வார்த்தை கேட்டு
கங்கைபோல் நீர்பெருக அழுதமாது
தங்கமனம் படைத்;தவரே! நபியே உம்மை
தவறாகப் பேசியதை மன்னியுங்கள்.
உங்களது பொறுமையினால் இஸ்லாம் மார்க்கம்
உலகமெலாம் பரவுமிது உண்மையென்று
அங்கமெல்லாம் நடுநடுங்க ஈமான் கொண்டு
அண்ணலார் கரம்பற்றி கலிமா சொன்னார்.

(வேறு)

‘ஹாத்தமுன்’ நபியின் பொறுமையை பற்றி
கவிதை படிப்பேனா.-இல்லை
கருணைநபி பட்ட கஷ்டங்கள் பற்றி
கண்ணீர் வடிப்பேனா..?

தொழுதிடும் நபியினில்; அழுகிய குடலை
தூக்கிப்; போட்டார்கள்-நபியோ
அழுதவர் நிலையை மாற்றிட இறையிடம்
‘துஆக்கள்’ கேட்டார்கள்.

நபியினைப்பார்த்து பைத்தியமென்று
கைகொட்டி சிரித்தார்கள்-நபியோ
மனிதனாய் அவர்கள் மாறிட இறையிடம்
கைகளை விரித்தார்கள்.

அண்ணலின் தோழர்கள் நெஞ்சிலே எதிரிகள்
அம்பினை தொடுத்தார்கள்-நபியோ
உண்ண வழியின்றி வந்த எதிரிக்கு
உணவும் கொடுத்தார்கள்.

‘அபுலஹப்’ உட்பட ‘குறைஷிகள’; அனைவரும்
கல்லை எறிந்தார்கள்-நபியோ
குறைஷிகள் உட்பட அடிமை யிடத்திலும்
அன்பை சொரிந்தர்கள்.

பாதையில் காபிர்கள் பதுங்கி இருந்து
பாய்ந்து அடித்தார்கள்-நபியோ
போதையில் ஆடிடும் அவர்நிலை மாறிட
தினமும் துடித்தார்கள்.

சு10னியக்காரன் ‘முஹம்மது’ என்று
பெண்களும் பழித்தார்கள்-நபியோ
பெண்களை உயிருடன் புதைக்கின்ற கொடிய
பேதமை ஒழித்தார்கள்.

இறைவன் ஒன்றென சொன்ன தற்காக
இழிவாய் நினைத்தார்கள்-நபியோ
இன்னல் தந்திட்ட எதிரியை மார்புடன்
இழுத்து அணைத்தார்கள்.

கட்டிய கடவுள்கள் பொய்யென சொன்னதும்
எட்டி உதைத்தார்கள்;-நபியோ
வெட்டி எறிந்திட வந்தவரிடமும்
சென்று கதைத்தார்கள்.

கோத்திரச் சண்டையில் மூழ்கியோர் பள்ளியில்
மூத்திர மடித்தார்கள்-நபியோ
ஆத்திரம் கொண்டு அடித்து விடாதவர்
மனதை படித்தார்கள்.

‘கலிமா’ச்சொன்ன ‘ஸஹாபிகள்’ தலையினை
கொய்து முடித்தார்கள்-நபியோ
கொய்தவர் கொண்டு  இறையருள் பணிகளை
செய்து முடித்தார்கள்.

நபியவர் தலையினில் நாளும்பெண்கள்
குப்பையை போட்டார்கள்-நபியோ
மனபிறழ்வாக  நடந்திட்ட அவருக்கு
மருந்தினை போட்டார்கள்.

கொடுத்த வாக்கை மறந்துவிட்டு
கொட்ட மடித்தார்கள்-நபியோ
உண்மை என்ற கொடியை நாளும்
உயர்த்திப் பிடித்தார்கள்.

சத்திய தூதர் நபியிடம் கூட
சந்தேகப் பட்டார்கள்.-நபியோ
சற்றும் தளர்வின்றி பொறுப் பதிலேதான்
சந்தோசப் பட்டார்கள்.

கயவர்கள் கதைகளை சிறுவர்கள் கேட்டு
கற்களை எறிந்தார்கள்-நபியோ
சின்னஞ் சிறுசுகள் செயல்களை கண்டு
புன்னகை  புரிந்தார்கள்.

எதிரிகள்கூடி மாநபி தோழர்கள்
நெஞ்சை பிளந்தார்கள-;நபியோ
நஞ்சைக் கலந்திட வந்தவர் நெஞ்சிலும்
அன்பைக் கலந்தார்கள்.

நிலவு முகத்தில் எச்சிலை துப்பி
நிம்மதி கண்டார்கள்-நபியோ
சேவகம் செய்யும் மனிதர்களோடும்
சேர்ந்தே உண்டார்கள்.

ஆண்டவன் ஒருவன் என்பவர் குரல்வளை
அறுத்திடச் சொன்னார்கள்.-நபியோ
கொடுமை கண்டு கொதித்திட்ட ‘உமரிடம்’
பொறுத்திடச் சொன்னார்கள்.

பரிவுள்ள நபிதலை கொய்திடின் அவருக்கு
பரிசுண்டு என்றார்கள்.-நபியோ
உண்மையை அன்பினை நெஞ்சினில் பற்றியே
உலகத்தை வென்றார்கள்.

பாவிகள் அனுதினம் பழியுரை கூறியே
பல்லிiனை உடைத்தார்கள்.-நபியோ
சத்திய வேதத்தை உலகெலாம் பரப்பி
சரித்திரம் படைத்தார்கள்.

பகைவர்கள் நண்பராய் பாங்குடன் நடித்து
பழியினை தீர்த்தார்கள்.-நபியோ
அநீதிகள் செய்த ‘அபூசுபியானையும்’
அணியிலே சேர்த்தார்கள்.

அவதூறென்னும் சேற்றினை நபியிடம்
அள்ளி எறிந்தார்கள்.-நபியோ
கீழ்தரமாக மக்கள்; நினைப்பதை
கிள்ளி எறிந்தார்கள்.

தாயிப் நகரின் வீதியில் அவரை
தாக்கி மிதித்தார்கள்.-நபியோ
தனக்குஏசிய தாயவள் சுமையை
தூக்கி மதித்தார்கள.

பிடரி சிவந்து நோகுமளவுக்கு
பிடித்து இழுத்தார்கள்.-நபியோ
அழுக்கு படிந்து கிடந்த மனதை
அன்பால் வெளுத்தார்கள்.

நபியவர் கொள்கையின் உண்மை அறிந்தும்
நாளும் மறுத்தார்கள்-நபியோ
நாளை யொருநாள் விடிந் திடுமென்று
யாவும் பொறுத்தார்கள்.

பொறுமையின் சிகரம் நபிதா னென்று
சொல்லி முடிப்பேனா.-இங்கு
இன்னும் அவர்துயர் சொல்லிடப்போனால்
அழுதிடும் என்பேனா…!!

திங்கள், 7 மார்ச், 2011

அமரர் கனகசபை சிவகுருநாதன்

இலங்கையில் வடமாகாணம், யாழ்ப்பாண மாவட்டத்தில் புலோப்பளையினைப் பிறப்பிடமாகக் கொண்ட அமரர் கனகசபை சிவகுருநாதன் ‘கசின்’ எனும் பெயரால் நன்கு அறியப்பட்ட பல்துறை எழுத்தாளரும், சமூக சேவையாளருமாவார்.  1920ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ஆம் திகதி புலோப்பளையில் கனகசபை சேதுப்பிள்ளை தம்பதியினருக்கு மகனாகப் பிறந்த இவர் க.வன்னியசிங்கம், பெ.நாகமுத்து, வ.சரஸ்வதி, பா. அன்னலட்சுமி ஆகியோரின் சகோதரராவார். சிவகுருநாதன் அவர்கள் தனது ஆரம்ப, இடைநிலைக் கல்வியினை உசன் இராமநாதன் கல்லூரி, அச்சுவேலி மத்திய மகாவித்தியாலயம், சாவக்கச்சேரி இந்துக் கல்லூரி ஆகியவற்றில் பெற்றார். 1940 ஆம் ஆண்டு திருநெல்வேலி ஆசிரியர் கலா சாலையில் ஆசிரியர் பயிற்சிக்காக சேர்ந்தார். அங்கு பண்டித மணி, சி.கணபதிப் பிள்ளை அவர்களின் வழிகாட்டலில் தமிழை நன்கு கற்றறிந்து 1943ஆம் ஆண்டு ஆசிரியராக வெளியேறி வவுனியாவில் கடமையாற்றினார்.

1950ஆம் ஆண்டில் பண்டிதர் பரீட்சை எழுதி அதில் சித்தியடைந்தார். அதன் பின்னர் செட்டிக்குளம், மன்னார், மத்துகம, கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் ஆசிரியப் பணி தொடர்ந்தது. அப்பகுதிகளில் அவரிடம் கல்வி கற்ற மாணவர்கள் இன்று உயர் பதவிகளில் இருப்பது அவரது சேவைக்கு எடுத்துக் காட்டாகும். 1971ஆம் ஆண்டு தொடக்கம் 1978ஆம் ஆண்டு சேவையிலிருந்து இளைப்பாறும்வரை உடுத்துறை மகாவித்தியா லயத்தின் அதிபராகக் கடமையாற்றினார். அக்காலப் பகுதியில் உடுத்துறை மகாவித்தியாலயம் பரீட்சைகளில் நல்ல பெறுபேற்றைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
 
‘கசின்’ சிவகுருநாதன் அவர்கள் சமூகப்பணி, இலக்கியப்பணி எனப் பல்வேறு துறைகளில் எமது சமூகத்திற்கு தொண்டாற்றினார். சாவகச்சேரி, சரசாலையில் வசிக்கும்போது இராமாவில் பிள்ளையார் கோவில் திருப்பணி, மட்டுவில் அம்மன் கோவில் திருப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அவர் வாழ்ந்த “நிதானபுரி” இல்லம் என்றும் அவ்வூர் மக்களால் நிறைந்து இருக்கும். இவரது சோதிடப் புலமையே இதற்குக் காரணமாகும். எதுவித பலனையும் எதிர்பாராது இல்லம் வரும் சகலருக்கும் விவாகப் பொருத்தம், பலன் சொல்வார். அந்தப் பணி பிற்காலத் தில் பம்பலப்பிட்டி அரச தொடர்மாடியில் வாழ்ந்த போதும் தொடர்ந்தது.

அதிபர் சேவையிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் தொண்ணூறுகளில் சில வருடங்கள் மன்னார் கேதீஸ்வரக் கோவலில் நிர்வாகப் பொறுப்பை ஏற்று திறன்பட நடத்தினார். இலங்கை இராணுவம் திருக்கேதீஸ்வரத்தை முற்றுகையிட்டபோது கோயிலில் கடமை புரிந்த ஊழியர்கள் எல்லோரும் வெளியேறி விட்ட நிலையில் கோவிலைப் பூட்டி இறுதியாக அங்கிருந்து வெளியேறியவர் சிவகுருநாதன் ஆவார். இறுதிக் காலத்தில் பம்பலப்பிட்டியில் வாழ்ந்தபோது கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அங்கு பால பண்டித வகுப்புகளில் இலவசமாக விரிவுரையாற்றினார். அவ்வகுப்புகளில் அரச சேவையில் பணியாற்றிய பலர் மாணவர்களாக விளங்கினார்கள். 1963ஆம் ஆண்டு கொழும்பில் கடமையாற்றியபோது இலங்கை கலை இலக்கிய பேரவையின் தலைவராக விளங்கினார். இவர் தலைவராக இருந்தபோது இலக்கியப் பேரவை பல இலக்கிய விழாக்களையும் இலக்கியக் கலந்துரையாடல்களையும் நடாத்தியமை குறிப்பிடத்தக்கது.
 
“கசின்” சிவகுருநாதனுடைய வாழ்க்கையில் அவர் ஆற்றிய ஆக்க இலக்கியப் பணி மிக உயர்ந்த இடத்தை வகிக்கின்றது. இவர் 1946ஆம் ஆண்டில் இலக்கியத்துறையில் காலடியெடுத்து வைத்துள்ளார். இவரின் கன்னியாக்கத்தை ஈழகேசரி பிரசுரித்துள்ளது. ஈழகேசரி உருவாக்கிய எழுத்தாளர்களில் ஒருவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
“கசின்” எனும் புனைப்பெயரில் முன்னைய இலக்கியத் தலை முறையினருக்கு நன்கு அறிமுகமான சிவகுருநாதன் ஆரம்ப காலங்களில் ஈழத்தில் அனைத்து பத்திரிகைகளிலும் நூற்றுக்கணக்கான ஆக்கங்களை எழுதியுள்ளார். சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் என முத்துறையிலும் “கசின்” அகலமாகவும், ஆழமாகவும் பாதம் பதித்திருந்தார்.
 
பண்டிதமணி கலாநிதி சி. கனபதிப்பிள்ளை அவர்களை என்றும் நினைவுகூர்ந்து வந்த இவரின் எழுத்துக்களில் பண்டித மணியின் சாயல்களை காணக்கூடியதாக இருக்கும்.  நகைச் சுவையுடன் எழுதி வந்த இவர் ஆனந்த விகடன் ஆசிரியர் தேவன் அவர்களை ஆக்க, இலக்கிய கர்த்தா என்ற வகையில் மானசீகமாக நேசித்து வந்தார்.
 
“கசின்” முதலில் ஒரு கட்டுரை ஆசிரியராகவே எழுத்துத்துறையில் பிரவேசித்துள்ளார். இலக்கியம் என்றால் என்ன?, தமிழ் ஆசிரியர் வரலாறு, பாட்டியின் ஆராய்ச்சி ஆகிய கட்டுரைகள் ஈழகேசரியில் வெளிவந்த நேரத்தில் இவருக்குப் பெரும் வரவேற்பினை பெற்றுக் கொடுத்துள்ளன. பின்னர் நாவலாசிரியராகவும், சிறுகதையாசிரியராகவும் பரிணமித்த போதிலும்கூட, இவர் கட்டுரைகள் எழுதுவதை நிறுத்திக் கொள்ளவில்லை. இலக்கியம் தொடர்பாகவும், கல்வியியல் தொடர்பாகவும் பல கட்;டுரைகளை இவர் எழுதியுள்ளார். அக்கால கட்டத்தில் கல்வி வெள்ளை அறிக்கை பற்றி சிந்தாமணியில் இவர் எழுதிய கட்டுரை கல்விமான்களிடையே பெரும் வரவேற்பினைப் பெற்றது. ஆய்வுக் கட்டுரைகளை “சட்டம்பியார்” என்ற புனைப் பெயரில் எழுதுவதை இவர் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

1947ஆம் ஆண்டில் கசினின் முதலாவது ஆக்க இலக்கியமான “வண்டியில் வளர்ந்த கதை” தொடர் நாவலாக ஈழகேசரியில் பிரசுரமானது. அந்நாவலில் அவர் கையாண்ட உத்தி காலத்தின் புதுமையானதாக சித்திரிக்கப்பட்டது. புகையிரதத்தில் சந்திக்கும் இருவர் ஒருவரை ஒருவர் அறிய முடியாமல் காதல் கடிதங்களை பத்திரிகை மூலம் பரிமாறிக் கொள்கின்றனர். கடிதம் மூலம் நாவலை வளர்த்து செல்வது ஒரு புதிய பரிணா மமாக இருந்தது.
 
இவர் பிற்காலத்தில் எழுதிய நாவல்களிலும் கடிதங்கள் மூலம் கதையை வளர்த்து செல்கின்ற பாணி நிறையவே காணப்பட்டதை அவதானிக்க முடிகின்றது. சகட யோகம், இராசமணிச் சகோதரிகள், இதய ஊற்று, தேடிவந்த செல்வம், கற்பகம், நிதானபுரி, சொந்தக்காரன், கண்டெடுத்த கடிதங்கள் என பல நாவல்களை இவர் எழுதியுள்ளார். இதன் மூலமாக ஈழத்து இலக்கியவானில் இவர் தனியிடம் பிடித்திருந்தார்.

நாவல் இலக்கியத்தைப் போலவே சிறுகதை இலக்கியத்திலும் இவர் புதுமைகளை சாதித்துள்ளார். மணியோசை, நூலும் நூற்கயிறும், இது காதலல்ல, பச்சைக் கிளி, பஞ்சும், நெருப்பும், சிலந்திவளை, தமிழன்தான், வனசஞ்சாரம், குந்து மாணிக்கம் என்பன இவரின் சிறுகதைகளுள் சிலவாகும். ஈழத் தமிழர்களின் பழக்க வழக்கங்கள், பேச்சுமுறை போன்றவற்றை இவரின் சிறுகதைகளில் நிறையவே காணமுடிந்தது. மண்வாசனை ததும்ப எழுதுவதில் “கசின்” தனித்துவமிக்கவராக விளங்கினார். நேர்மையான போக்கும், விசால உள்ளமும், நடுநிலைக் கொள்கையும் உடையவர்களிடமிருந்து தான் சிறந்த இலக்கியங்கள் தோன்ற முடியும்’ என்ற கருத்தில் “கசின்” பிடிவாதமாக இருந்தார். இலங்கையின் அனைத்து தேசிய பத்திரிகைகளிலும் போல இவரின் ஆக்கங்கள் பிரசுரமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவரது இலக்கியச் சேவையைப் பாராட்டி 1994ஆம் ஆண்டு இலக்கியப் பேரவை யாழ் மண்ணில் விழா எடுத்து மூத்த எழுத்தாளரான இவரைக் கௌரவித்தது. இவரது தமிழ்ப் புலமையைப் பாராட்டி கொழும்பு தமிழ்ச்சங்கம் 1999ஆம் ஆண்டு நடாத்திய புலவர், வித்துவான்கள் மாநாட்டில் இவருக்கு ``இயற்றமிழ் வித்தகர்’’ என பட்டமளித்து கௌரவித்தது. 2000ஆம் ஆண்டு இவரது இலக்கியப் பணிக்காக இலங்கை அரச கலாசாரத் திணைக்களம் ``கலாபூசணம்’’ விருது வழங்கி கௌரவித்தது.

1944ஆம் ஆண்டு சரசாலை கணக்கர் கனகசபை செல்லம்மா தம்பதியினரின் மகளான இராசம்மாவை கரம்பிடித்து இல்லற வாழ்க்கையில் பிரவேசித்த இவருக்கு ஐந்து பிள்ளைகள் உளர். அவர்களில் மூவர் ஆண்பிள்ளைகள். இருவர் பெண்பிள்ளைகள். மூத்த மகள் புஷ்பராணி. மூத்த மகன் புஷ்பநாதன். அடுத்த பிள்ளைகள் செல்வராணி, சபாநாதன், கேதீஸ்வரநாதன் ஆகியோராவர்.
 
2003ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் 13ஆம் திகதி இவர் எம்மைவிட்டு பிரிந்தாலும் இவரின் சமூக மற்றும் இலக்கிய சேவைகள் எம்மைவிட்டுப் பிரியாது. இவரின் பல படைப்புகள் நூலுருப் பெறாமல் இருக்கின்றன என அறிய முடிகின்றது. இருப்பினும் இவரது நூலுருவான சில படைப்புகளின் விபரம் வருமாறு:

நிதானபுரி
கசின் எழுதிய நான்கு குறுநாவல்களின் தொகுதி இதுவாகும். இத் தொகுதியில் நிதானபுரி, கற்பகம், சொந்தக்கால், தேடிவந்த செல்வம் ஆகிய  நான்கு குறுநாவல்கள் இடம்பெற்றுள்ளன. இத்தொகுதியின் முதற்பதிப்பு 1995ம் ஆண்டு டிசம்பரில் கொழும்பு சிற்றிசன் பிரின்டர்ஸ்ஸில் அச்சிடப்பட்டு சீ.சபாநாதன் அவர்களினால் வெளியிடப்பட்டது. இப்புத்தகம் 150 பக்கங்களைக் கொண்டது. 

காதலும் கடிதமும்.
இந்நூலில் வண்டியில் வளர்ந்த கதை, கண்டெடுத்த கடிதங்கள் ஆகிய இரண்டு கதைகள் பிரசுரமாகியுள்ளன. இவ்விரு கதைகளும் முறையே ஈழகேசரி, வீரகேசரியில் பிரசுரமானவையாகும். இத்தொகுதியின் முதற்பதிப்பு 1995ம் ஆண்டில் கொழும்பு சிற்றிசன் பிரின்டர்ஸ்ஸில் அச்சிடப்பட்டு சீ.சபாநாதன் அவர்களினால் வெளியிடப்பட்டது.

கசின் சிறுகதைகள்.
இந்நூல் யாழ். இலக்கியவட்டம் வெளியிடாக 1999 ஏப்ரல் மாதம் முதலாம் பதிப்பு வெளிவந்தது. இந்நூலினை பொ. ஆனந்த லிங்கம் என்பவர் தொகுத்திருந்தார். இந்நூலின் விலை 125 ரூபாவாகும். இந்நூலில் கசின் அவர்களினால் எழுதப்பட்ட 15 சிறுகதைகள் சேர்க்கப்பட்டுள்ளன.150 பக்கங்களைக் கொண்ட இத்தொகுதிக்கு கலாநிதி க. குணராசா அணிந்துரை வழங்கியிருந்தார். 

குமாரி இரஞ்சிதம்.
இந்நூல் கல்ஹின்னை தமிழ் மன்றத்தின் 95வது வெளியிடாக  முதற்பதிப்பு 2000ம் ஆண்டில் செப்டம்பர் மாதம் வெளிவந்தது. இது ஒரு நாவலாகும்.

சகடயோகம்.
இந்நூல் பம்பலப்பிட்டி சந்ரா வெளியீடாக முதற்பதிப்பு 2001ம் ஆண்டு ஜுன் மாதம்  வெளிவந்தது. இதுவும் ஒரு நாவலாகும்.    

கசின் நினைவலைகள். 
இந்நூல் கசின் அவர்களின்  வாழ்க்கைச் சுவடும் இலக்கியப் பதிவும்கொண்டதாக அமைந்துள்ளது. இந்நூலை பொ. ஆனந்தலிங்கம் தொகுத்துள்ளார். 

வெள்ளி, 4 மார்ச், 2011

சக்தி. அ. பாலஐயா

இலங்கையில் மத்திய மலையகத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட மூத்த கவிஞர், நலிவுற்ற மக்களின் ஏக்கத்துக்காக அரைநூற்றாண்டுக்கும் மேலாக வீச்சுமிக்க தமது எழுத்துக்களாலும், வீராந்த பேச்சுக்களாலும் சிறந்த பணியாற்றி வருபவர். கைதேர்ந்த ஓவியர். பல்கலைகளிலும் ஆற்றல் வாய்ந்த கலைஞராவார். கொழும்பு நுண்கலைக் கல்லூரியில் போதனாசிரியராகப் பணிபுரிந்து சிற்பம், சித்திரம், வண்ண வேலைகள் தொடர்பான துறைகளில் பல கலைஞர்களை உருவாக்கியவர். மும்மொழி வல்லுனர். சிறந்த மொழிபெயர்ப்பாளர் என பல்துறையிலும் புகழுக்குரிய சக்தி. அ. பாலஐயா இன்று நோய்வாய்ப் பட்ட நிலையில் இருந்தாலும் மலையக மக்கள் எழுச்சிக்கு பாடுபட்டவர்.

இலங்கையில் மத்திய மலையகத்தில் விஸ்வநாதர், இலக்குமி அம்மை தம்பதியினரின் புதல்வராக 1925ஆம் ஆண்டு ஜுலை 26 ஆந் திகதி நுவரெலியா மாவட்டத்தில் பிறந்தபால ஐயா தனது பத்தாவது வயதிலேயே ‘பாரதியின் தாக்கம்’ என்னும் தலைப்பில் தனது முதல் கவிதையை எழுதினார். காந்தி பக்தராகவும் கதராடை அணிபவராகவும், இந்திய விடுதலை இயக்கத்தில் பங்கு கொண்ட தலைவர்களின் ஆற்றல், பெருமை, தியாகம் ஆகியவை பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் மிக்கவராகவும் அந்தப் பத்து வயதிலேயே இவர் இருந்திருக்கின்றார் என்பது ஆச்சரியத்தைத் தருகின்றது.

பத்து வயதிலேயே பாட்டெழுதத் தொடங்கினாலும் அதை அவர் ஏனோ தொடரவில்லை. ஓர் ஓவியராகவே தன்னைத் தயார்படுத்திக் கொண்டு வந்தார். ஆனாலும், இவருக்குள்ளே ஒரு கவிஞன் உருவாகிக் கொண்டே இருந்தான்.

படிப்பை முடித்துக் கொண்ட சக்தி ஓர்  ஓவியராகவே தனது வாழ்வைத் தொடங்கினார். ஒரு Commercial Artist  ஆகத் தொழிலை மேற்கொண்ட இவர் ஒரு சில நூல்களுக்கும், சஞ்சிகைகளுக்கும் அட்டைப் பட ஓவியங்கள் வரைந்துள்ளார். வீரகேசரியின் ஆசிரியர் திரு. லோகநாதனின் சிறுகதைத் தொகுதி – சீ.வி. நடத்திய ‘கதை’ என்னும் சஞ்சிகை போன்றவைகளை சில உதாரணங்களாகக் குறிப்பிடலாம். இலங்கை அரசின் நுண்கலைக் கல்லூரியில் 1943 – 1944 ஆம் ஆண்டுகளில் கலை ஆசிரியராக பயிற்சி பெற்ற இவர், ஆங்கிலக்கலை ஆசிரியராகவும், விரிவுரையாளராகவும், ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கும் அரசாங்கக் கலைக் கல்லூரியில் விரிவுரையாளராகவும் 1951வரை பணிபுரிந்துள்ளார்.

‘Ceylon Teachers College’  மற்றும் ‘Hay Wood’s College Of Fine Arts’ ஆகிய கலைக் கூடங்களில் ஆசிரியராகவும், விரிவுரையாளராகவும் பணியாற்றிய சக்தியின் ஓவியக் கண்காட்சிகள் கொழும்பிலும் பிற இடங்களிலும் 1948 – 49 ஆம் ஆண்டுகளில் பிரசித்தம் பெற்றன. காலப்போக்கில் இவரது சிந்தனைகள் கவிதைக்கு வித்திட்டன. 1949க்குப் பின் வீராவேசம் கொண்ட இவருடைய கவிதைகளும், கட்டுரை இத்தியாதி எழுத்துக்களும் வீரகேசரி, தினகரன், சுதந்திரன், ஈழநாடு போன்ற ஏடுகளில் அடிக்கடி பிரசுரம் பெற்றன. கல்கி மற்றும் சி. என். அண்ணாத்துரை அவர்களின் திராவிட நாடு போன்ற தமிழக ஏடுகளிலும் சக்தியின் எழுத்துக்கள் இடம்பெற்றன.

ஓவியக் கலைஞர்கள் பற்றிய வரலாற்று கட்டுரைகளை யும்ää ஓவியங்கள் கூறும் தத்துவங்கள் பற்றியும் விரிவாக பத்திரிகைகளில் எழுதியுள்ளார். வீரகேசரி பத்திரிகையில் துணை ஆசிரியராகவும் ‘தமிழ் ஒலி’யின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இவரது சொந்த பத்திரிகையான “வளர்ச்சி” யில் 1956ம் ஆண்டில் எழுதிய எழுச்சிமிகு கட்டுரைகளை தமிழகத்தில் ‘திராவிட நாடு’ மறுபிரசுரஞ் செய்துள்ளது.

சமூக மறுமலர்ச்சி இயக்கம் என்பதன் ஒரு துணை விளைவாகவே ஆரம்பகால மலையக இலக்கியங்கள் தோன்றியிருக்கின்றன என்னும் உண்மை மலையக இலக்கியம் பற்றிய ஆரம்பத் தேடல்களில் ஈடுபட்டுள்ள அனைவருமே உணர்ந்துவரும் ஒரு முக்கியமான விடயமாகும்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலக் கோப்பித் தோட்டக் குடியேற்றத்திலிருந்து, பிந்திய தேயிலைத் தோட்டக் குடியேற்றக் காலத்திலிருந்தும் இத்தென்னிந்திய மக்கள், மலையகத் தொழிலாளர்கள் பட்டதுன்ப துயரங்களும் அனுபவித்த வேதனைகளும், பட்டாளத்துக் கட்டுப்பாடுகள் போன்ற வெள்ளைக்காரர்களின் இராணுவ அடக்கு முறைகளும் எழுத்திலடங்காதவைகள்.

தங்களின் சக்தி உணராமல், உழைப்பின் பயன் உணராமல் சோர்ந்தும் சோம்பியும் கிடந்த இவர்களைத் தட்டி எழுப்புவதையே குறிக்கோளாகக் கொண்டதாய்க் கிளம்பியதே மலையக இலக்கியம். இவ்வெழுத்து முயற்சிகளின் முன்னோடிகளாக விளங்கும் கோ. நடேசய்யர், சி.வி. வேலுப்பிள்ளை, கே. கணேஷ், சக்தி பாலையா போன்றவர்கள் சமகாலத்தவர்கள். இவர்களுடைய சிந்தனைகளும் ஒன்றாகவே இருந்திருக்கின்றன. இந்த மக்களின் விழிப்பு, விடிவு, சுதந்திரச் சமத்துவம் ஆகியவைகளே இவர்களுடைய எழுத்துப் பணிகளின் முனைப்பான அம்சங்களாக இருந்தன. ‘நடேசய்யரின் சாதனைகள்’ என்று நிறைய விஷயங்களை தனது கட்டுரைகள் மூலம் வெளியிட்டவர் மக்கள் கவிஞர் சி.வி.

சி. வி. க்கு பரவலான அறிமுகத்தினையும் ஏகோபித்த புகழையும் கொடுத்த ‘In Ceylons Tea Gardens’  எனும் ஆங்கிலக் கவிதை நூலை ‘தேயிலைத் தோட்டத்திலே’ என்று தமிழாக்கித் தந்தவர் கவிஞர் சக்தி .அ. பாலையா. இந்தத் தமிழாக்கம் வீரகேசரியில் தொடராகப் பிரசுரிக்கப்பட்டது. பிறகு செய்தி ரா.மு. நாகலிங்கம் அவர்களால் செய்தி பதிப்பகம் மூலம் நூலாக வெளியிடப்பட்டது. (ஆங்கில மூலம் 1954- மொழி பெயர்ப்பு 1969)

 ‘கவிஞர் சி.வி. வேலுப்பிள்ளை அவர்களின் கவிதைத் தொகுதியைத் தமிழாக்கும்போது கவிஞரவர்களின் உள்ளத்தையும் உணர்வையும், ஏழ்மையில் வாடும் மலையத் தொழிலாளர்களின் பால் அவர் கொண்டிருக்கும் பாசமும் பரிவும் அலைத்திரல்களாக எனது சிந்தனைகளைத் தழுவித் தொடர்ந்தன....

கவிஞரின் ஆங்கிலக் கவிதைகளைத் தமிழ்க் கவிதையாக்கும்போது அவரது மூலக் கருத்துணர்வில் கலந்திட விழைந்திருக்கின்றேன். கருத்தாழம் வழுவாதிருந்திடக் கவிஞரின் கவிதைகளில் ஊடுருவும் மலையக மக்களின் உணர்வாம் கருப் பொருளைத் தழுவியே தமிழ்க் கவிதைகளை தந்திட முயன்றிருக்கின்றேன்….|| என்று இந்த நூலுக்கான முன்னுரையில் சக்தி குறிப்பிட்டிருந்தாh.;

 1963ல் தினகரனின்  கலை மண்டலம் பகுதியில் ‘மேல் நாட்டு ஓவியர்கள்’ என்னும் தலைப்பில் பல ஆக்கங்களைப் படைத்துள்ளார். அதே காலகட்டத்தில் சுதந்திரனில்  மலை நாட்டு அறிஞர்கள்  என்னும் தலைப்பில் தொடர்ந்து பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.


 சக்தி பாலையா, தனிவழிக் கவிராயர், மலையரசன், லக்ஷ்மி ஆகிய புனைப் பெயர்களிலும் இவரது ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. இவர் தமிழ் ஒளி (1954) வளர்ச்சி (1956) ஆகிய சஞ்சிகைகளையும் வெளியிட்டுள்ளார். 1956ன் அரசியல் கெடுபிடிகள் பற்றி நாம் அறிந்ததே. சிங்களம் மட்டும் சட்டத்தின் மூலம் தமிழுரிமை  பறிக்கப்பட்டு சிங்களப் பேரினவாதம் முனைப்புப் பெற்ற காலம் அது. அரசின் பேரினவாதத்திற் கெதிராகவும் அரசியல்வாதிக ளையும்ää சிங்களத் தலைவர்களையும் நேர்மையான வழியில் நடக்கும் படியும் அறிவுறுத்துவதற்காக வென்றே சக்தி பாலையா அவர்கள் இந்தப் பத்திரிகையைத் தொடங்கி நடத்தினார். ‘வளர்ச்சி’ பத்திரிகையின் அன்றைய ஆசிரியத் தலையங்கங்கள் மிகவும் காத்திரமானதாகவும்ää காரசாரமானதாகவும் இருந்தன. அவற்றின் முக்கியம் கருதி அறிஞர் அண்ணாவின் “திராவிட நாடு” இத்தலையங்கங்களை மீள் பிரசுரம் செய்து வந்தது.

1948ல் இலங்கைக்குச் சுதந்திரம் கிடைத்தகையுடன் மலையக மக்களின் வாக்குரிமை மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து மலையகத் தலைவர்கள் நடத்திய சக்தியாக்கிரகத்தில் சக்தீயும் கலந்துகொண்டார்.

1956ன் சிங்களம் மட்டும் சட்டத்தை எதிர்த்து 1957ல் தமிழ்த் தலைவர்கள் நடத்திய எதிர்ப்புக் கூட்டங்களிலும் இவர் கலந்து கொண்டார். ‘மனோதத்துவமும் கலையும், போதனா முறையும்’ என்னும் பயிற்சி நூலினை 1952ஆம் ஆண்டு வெளியிட்டார்.

 ‘சொந்த நாட்டினிலே’ என்னும் தேசியப் பாடல்கள் அடங்கிய நூலினை மொழியுரிமைக்காக 1956ல் வெளியிட்டார். வீரகேசரியின் துணை ஆசிரியராகச் சில காலமும் சி.வி.யின் “மாவலி” சஞ்சிகையின் இணை ஆசிரியராகச் சிலகாலமும் பணிபுரிந்துள்ளார். 1960களின் ஆரம்பத்தில் ‘இந்திய வம்சாவழிப் பேரவை’ என்னும் அமைப்பினைத் தொடங்கி மலையக மக்களின் நிலைமைகளை இந்திய இலங்கை அரசினர்களுக்கு அறிவிப் பதன் மூலம் அவர்களின் பிரச்சினைகளுக்கான விடிவுகளைத் தேட ஒரு வழி சமைத்தார்.

1981ல் பஸ்ஸிலிருந்து விழுந்து ஒரு கோர விபத்துக்குள்ளானார் சக்தீ. அது பற்றி அவர் கூறுகையில், அவரது மன உறுதியும், வாழ்வின் மீதான அவரது திடமான நம்பிக்கையும், திண்மையும் புலனாகிறது.

    ‘நான் பஸ்ஸினடியில் கிடக்கின்றேன். நான் கிடப்பது பஸ் சாரதிக்குத் தெரியாது. இடது காலின் மேல் பஸ்ஸின் பின் சில்லு ஏறியபோது கால் எலும்புகள் கரகரவென நொறுங்கும் மெல்லிய ஓசை எனக்குத் தெளிவாகக் கேட்டது. சில்லு படிப்படியாக எனது முழங்கால், தொடை என்று ஏறி கத்த முடியவில்லை. சத்தம் வர மறுக்கிறது. அப்போது தான் யேசுநாதரின் கிருபையால் அது நடந்தது. யாரோ எனது நெஞ்சுக்குள் புகுந்து தொண்டை வழியாக வெளியேறி கத்து, கத்து என சத்தமிட்டார்கள். கத்தினேன். பஸ்ஸின் சில்லு அசையாமல் நின்றுவிட்டது. என்னை எப்படி வெளியே எடுத்தார்கள் என்ன செய்தார்கள். ஒன்றுமே தெரியவில்லை. ஆஸ்பத்திரியில் கிடந்தேன்.

    மாதக்கணக்கில் மருத்துவமனைக் கட்டில் பிறகு இரண்டு கால்களையும் முழங்காலுடன் வெட்டினால் தான் உயிர் பிழைப்பேன் என்றார்கள் டாக்டர்கள். இரண்டு கால்களையும் இழந்த பிறகு நான் எப்படி வாழ்வது. பிடிவாதமாக மறுத்து விட்டேன். மரணத்துடன் வருடக்கணக்கில் போராடி பலவிதமான சுய வைத்தியங்கள் செய்தேன்.

    பிறகு மெதுவாக ஊன்று கோல்களுடன் எழுந்து நடமாடினேன் என்று கூறும் சக்தீ இப்போது ஊன்றுகோலினையும் வீசி எறிந்துவிட்டு மிகவும் சாதாரணமாக எதுவுமே நடவாதது போல் மீண்டும் தனது வேலைகள், இலக்கியக் கூட்டங்கள் என்று உலாவருகின்றார்.
      இவரது கலை இலக்கியப் பணிகளுக்காக அரசாங்கம் கவிச்சுடர் பட்டமளித்துக் கௌரவித்தது (1987). தமிழ் ஒளிபட்டமும் விருதும் 1993ல் வழங்கப்பட்டது.  இலங்கை கம்பன் கழகம் 1998ஆம் ஆண்டு “மூதறிஞர்”; விருதளித்தது. கலாசார அமைச்சு ~~கலாபூஷணம்|| விருதும் வழங்கி இவரை கௌரவித்துள்ளது.

      தேசிய அருங்கலைச்சபை மற்றும் அரசின் மலையகக் கலாசார மேம்பாட்டுக்குழு ஆகியவற்றின் அங்கத்தவராக இருந்து கவிஞர் சக்தீ பணியாற்றி வருகின்றார். இவர் இதுவரை எழுதியுள்ள நூல்களாவன

•    மனோதத்துவமும் கலையும் போதனா முறையும் 1952
•    சொந்த நாட்டிலே – தேசிய கீத நூல் 1956
தேயிலைத் தோட்டத்திலே – மொழிபெயர்ப்புக் கவிதை நூல் 1969
•    சக்தீ பாலஐயா கவிதைகள் - துரை வெளியீடு 1998


இவருடைய முகவரி:-

SAKKTHIE BALA – IAH,
64 – 1/20, DAM STREET,
COLOMBO - 12

வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

டாக்டர் ஞானசேகரன்

மேல் மாகாணம்,  கொழும்பு மாவட்டம்,  வெள்ளவத்தை கிராமசேவகர் பிரிவில் வசித்துவரும் டாக்டர் ஞானசேகரன் அவர்கள் நாடறிந்த ஒரு எழுத்தாளரும், சஞ்சிகையாசிரியருமாவார்.

1941ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் திகதி தியாகராசா ஐயர் - வாலாம்பிகை தம்பதியினரின் புதல்வராக யாழ்ப்பாண மண்ணில் பிறந்த இவர், புன்னாலைக்கட்டுவன் அரசினர் தமிழ் பாடசாலை, உரும்பராய் இந்துக் கல்லூரி, பேராதனைப் பல்கலைக்கழகம், இலங்கை மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார். தற்போது ஒரு டாக்டராக பணியாற்றி வருகின்றார். இவரின் அன்புப் பாரியார் ஞானலட்சுமி. இவர் இளைப்பாரிய ஆசிரியை. இத்தம்பதியினருக்கு இராஜேஸ்வரன்,  வசுந்தரா,  பாலசந்திரன் ஆகிய அன்புச் செல்வங்களுளர்.

இவரது இளம் வயது முதல் இவர் ஓர் இலக்கியச் சூழலில் வளர்ந்தவர். தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய வித்துவசிரோமணி சி. கணேசையர் இவரின் பூட்டனார். நல்லூரில் ஆதினம் அமைத்து தமிழுக்கும் சைவத்திற்கும் தொண்டாற்றிய சுவாமி நாதர் தம்பிரான் சுவாமிகள் இவரது தாய் மாமா. இவர்களைவிட இவரது உறவினர் பலர் பழந்தமிழ் இலக்கியங்களில் பரிச்சயம் உள்ளவர்களாக இருந்தனர். எந்தவொரு சம்பவத்தையும் பழந்தமிழ் இலக்கியங்களிலிருந்து எடுத்துக் காட்டுக்களுடன் விளக்கி இலக்கியச் சுவையுடன் பேசவல்ல பலர் இவரின் உறவினர்களாக இருந்தனர். இவர்களின் சிலர் கோவில்களில் புராண படனங்களுக்குப் பயன் சொல்வதில் வல்லமை பெற்றிருந்தனர்.

இதன் காரணமாக இவருக்கு இளம் வயதிலே பழந் தமிழ் இலக்கியங்களில் பரிச்சயம் ஏற்பட்டது. பாடசாலையில் கற்கும் காலத்திலிருந்தே இவரது தாயார் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவித்துள்ளார். அக்கால கட்டங்களில் கல்கி, ஆனந்தவிகடன், கலைமகள் போன்ற சஞ்சிகைகளை வாசிக்கத் தொடங்கிய இவர், கல்கி,  அகிலன், சாண்டில்யன்,  ஜெயகாந்தன், மு.வ.,  புதுமைப்பித்தன் ஆகியோரின் படைப்புகளை ஆர்வத்துடன் வாசித்து வந்தார். இதனால் இவர்களைப் போல தானும் கதைகள் எழுத வேண்டும் என்ற ஆர்வம் இவருக்கு இளம் வயதிலேயே ஏற்பட்டது.

இந்தியாவிலிருந்து  கண்ணன் என்ற சிறுவர்களுக்கான சஞ்சிகையொன்று அக்காலகட்டத்தில் வெளிவந்து கொண்டிருந்தது. பள்ளிப் பராயத்தில் அச்சஞ்சிகைக்கு சிறு துணுக்குகள், வாசகர் கடிதங்கள் போன்றவற்றை அடிக்கடி எழுதி வந்தார். இவை பிரசுரமானதும் இவருள் எழுத வேண்டும் என்ற உத்வேகம் மேலும் மேலும் அதிகரித்தது.

இந்த அடிப்படையில் 1964ஆம் ஆண்டில் கலைச்செல்வி எனும் சஞ்சிகையில் பிழைப்பு எனும் தலைப்பில் இவரது முதலாவது சிறுகதை பிரசுரமானது. தொடர்ந்து பல சிறுகதைகளை இலங்கையில் வெளிவந்து கொண்டிருந்த வாரப் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் எழுதினார். இந்தியாவிலிருந்து வெளிவரும் தரம் வாய்ந்த தமிழிலக்கிய சஞ்சிகையான கலைமகளிலும் இவரின் சில கதைகள் பிரசுரமாகியுள்ளன. இதுவரை 100க்கும் மேற்பட்ட சிறுகதைகள்,  கட்டுரைகள்,  நூலாய்வுகள் என இவர் எழுதியுள்ளார். டாக்டர் ஞானசேகரன் அவர்கள் இதுவரை ஒன்பது நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். 

01.    காலதரிசனம்
1973ல் வெளியானது. 12 சிறுகதைகள் அடங்கிய இச்சிறுகதைத் தொகுதிக்கு பேராசிரியர் க. கைலாசபதி முன்னுரை எழுதியிருந்தார். இம்முன்னுரையில் பேராசிரியர் நூலாசிரியர் தி. ஞானசேகரன் அவர்களைப் பற்றி குறிப்பிடும்பொழுது,  மன விகசிப்பும், கலைமெருகும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய வகையில் வளர்ச்சிபெற்ற சிறுதை ஆசிரியர் என்றார். (15.04.1973)

02.    புதிய சுவடுகள்
1977ல் எழுதிய முதல் நாவல் வெளியாகியது. வீரகேசரி அக்காலத்தில் ஒரு நாவல் போட்டியை நடத்தியது, அதற்கென எழுதப்பட்டதே இந்த நாவல். பின்னர் இந்நாவல் வீரகேசரிப் பிரசுரமாக வெளிவந்தது. இந்நாவல் அந்த ஆண்டுக்கான அரச சாகித்திய விருதினைப் பெற்றது. இந்நாவல் பற்றி பேராசிரியர் சு. வித்தியானந்தன்  ஆழமான சமுதாயப் பார்வையில் வீசி நிற்கும் இவரது நாவல் சுபிட்சமும், செழுமையும் நிறைந்த புதியதொரு காலத்தை தருசித்து நிற்கின்றது (06.03.1978) என்றும், பேராசிரியர் க. அருணாசலம்  யாழ்ப்பாண மண்ணுக்கே சிறப்பாகவுரிய பிரச்சினையொன்றினை அதற்குரிய காரணிகளை அறிவுபூர்வமாக அணுகி உணர்ச்சிபூர்வமாக திட்டமிட்ட கதையும், சத்துடன் புதிய சுவடுகள் நாவல் படைக்கப் பட்டுள்ளது. சமுதாயத்தின் ஊழல்களையும், போலித் தனங்களையும்,  மாறிவரும் கருத்தோட்டங்களையும் இந்நாவல் சித்தரிக்கின்றது (15.03.1980) என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

03.    குருதிமலை
1979ல் வீரகேசரிப் பிரசுரமாக வெளிவந்தது. அவ்வாண்டுக்கான சாகித்திய விருதினைப் பெற்றது. இதுவொரு மலையக நாவல். தான் மலையகத்தில் வைத்திய அதிகாரியாகத் தொழில் புரிந்ததால் அங்கு பெற்ற அனுபவம் இந்த நாவலை எழுதத் தூண்டியுள்ளது. இந்நாவல் தகவம் பரிசினையும் பெற்றுக் கொண்டது. 1986ல் ஈழத்தில் அதுவரை வெளிவந்த ஆக்க இலக்கியங்களில் நாவல் சார்ந்த சிறந்த நூல்களில் ஒன்றென இலங்கை இலக்கியப் பேரவையின் சான்றிதழையும்  பெற்றது. இந்நாவல் பற்றி கலாநிதி நா. சுப்பிரமணியம் 1988 மல்லிகை இதழில் பின்வருமாறு எழுதியிருந்தார்.  கதைசொல்லும் முறையிலும், தொழிலாளருது பண்பாட்டுக் கோலங்களைக் காட்டும் முறையிலும் ஞானசேகரன் அவர்களது ஆற்றல் விதந்து பாராட்டத்தக்கது. இதுவொரு இலக்கியம் என்ற வகையில் மட்டுமன்றி மலையக மக்களின் ஒரு காலகட்ட வரலாற்று ஆவணம் எனத்தக்க தகுதியும் பெற்றுள்ளது. பேரினவாதத்திற்குப் பணியாத தமிழுணர்வின் முதற்கட்ட வெற்றிற்கு கட்டியம் கூறிநிற்கும் படைப்பு இது எனலாம்

மதுரை அமெரிக்கன் கல்லூரி விரிவுரையாளர் செ. போத்திரெட்டி குருதிமலை என் உள்ளத்தை பிணித்த உன்னத படைப்பு. அந்நாவலை அக்கரைத் தமிழ் எனும் முதுகலைத் தாள் ஒன்றிற்கு பாடநூலாக வைக்க முடிவு செய்துள்ளோம். என்றார். இந்த அடிப்படையில் 1992ல் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் எம்.ஏ. பட்டப் படிப்பிற்குப் பாடநூலாகத் தெரிவுசெய்யப்பட்டது. இந்நாவல் 3 பதிப்புக்களைப் பெற்றுள்ளது. மேலும்,  இந்நாவல் சிங்கள மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு சிங்கள வாசகர்கள் மத்தியிலும் எழுத்தாளரை அறிமுகம் செய்து வைத்துள்ளது. 

04.    லயத்துச்சிறைகள் - (குறுநாவல்) 
லயத்துச்சிறைகள் 1994ல் வெளிவந்தது. மலையக நாவல். 1995ல் சிறந்த நாவலுக்கான மத்திய மாகாண கலாசார அமைச்சின் சாகித்திய மண்டலப்பரிசு பெற்றது. இலங்கை இலக்கியப் பேரவை யின் சிறந்த நாவலுக்கான சான்றிதழையும் பெற்றுள்ளது.

இந்நூல் பற்றி பேராசிரியர் எஸ். தில்லைநாதன் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார். “மலையக மக்கள் தங்களது எதிர்கால வாழ்க்கைக்குத் தயார் செய்துகொள்ள,  தமது சொந்தக் காலிலே நிற்கவேண்டுமென்ற நிதர்சன உண்மையை இந்த ‘லயத்துச் சிறைகள் நாவல் வெளிப் படுத்துகின்றது. தோட்டப் பிரதேசத்திலேயே வாழ்ந்து அவர்களது யதார்த்தங்களை மிகத் தெளிவாக அறிந்தா இந்த நாவலை படைத்திருக்கிறார் நூலாசிரியர்? அவரது படைப்பாற்றல் பாராட்டுக்குரியது என்றார்.

05.    கவ்வாத்து – குறுநாவல்
(1996) தேசிய கலையிலக்கியப் பேரவையும், சுபமங்களாவும் இணைந்து நடத்திய குறுநாவல் போட்டியில் பரிசுபெற்றது. ‘விபவி கலாசார மையத்தின் 1996ல் வெளிவந்த சிறந்த படைப்பிற்கான ‘தங்கச்சங்கு விருதும், சான்றிதழும் பெற்றது. மத்திய மாகாண சாகித்திய விருதினையும் பெற்றது.

இந்நூல் பற்றி பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார். “திரு. ஞானசேகரனின் இந்தக் குறுநாவல், மலையகப் பெருந்தோட்ட தமிழர் எதிர்நோக்கும் பிரச்சினையை நோக்குகிறது. அது தொழிற்சங்கங்களின் பயன்பாடு என்பதாகும். எந்தத் தொழிற்சங்க இயக்கம் அவர்களின் சமூக – பொருளாதாரத் தனித்துவங்களை உணர்ந்த அவர்களின் “நல்வாழ்க்கைக்குப் போராடிற்றோ,  இன்று அதே அந்த மக்களின் ஒற்றுமையின்மைக்கு வழிவகுக்கும் சமூகக் கருவியாக மாறியுள்ள நிலைமையை இந்தக் குறு நாவலிலே காண்கிறோம். மலையகப் பெருந்தோட்டத் தமிழர்களை எதிர்நோக்கி நிற்கும் (இன்றைய) மிகப் பெரிய சவால் இது… இந்தப் பிரச்சினையின் ஒரு வெட்டுமுகத்தை ஒரு வன்மையான முனைப்புடன் இந்தப் படைப்புத் தருகின்றது என்றார்.

இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள குறுநாவல்களுள் 1995ஆம் ஆண்டு தமிழக சுபமங்கள சஞ்சிகை நடத்திய ஈழத்து குறுநாவல் போட்டியில் பரிசும், பாராட்டும் பெற்ற கதையொன்று இடம்பெற்றுள்ளது.

06.    அல்சேசனும் ஒரு பூனைக் குட்டியும்
அல்சேசனும் ஒரு பூனைக் குட்டியும் (1998) (சிறுகதைத் தொகுதி). தற்போது இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் B.A வகுப்பிற்குரிய பாடநூலாக வைக்கப்பட்டுள்ளது. இந்நூல் பற்றி பேராசிரியர் க. அருணாசலம் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார். “திரு. ஞானசேகரன் அவர்கள் கதைகளின் உள்ளடக்கத்தில் மட்டுமன்றி உருவ அமைதியிலும் தீவிர கவனம் செலுத்தியுள்ளமையை அநேகமாக எல்லாக் கதைகளிலும் காணமுடிகிறது. உள்ளடக்கங்களுக்கேற்ற மிகப் பொருத்தமான தலைப்புகள், உயிர்த்துடிப்புமிக்க நடை மிகப்பொருத்தமான கதைத் திருப்பங்கள், சிந்தனையைத் தூண்டும் முடிவுகள்,  பண்புநலனை வெளிப்படுத்தும் பாத்திர வார்ப்புகள், உவமைப் பிரயோகங்கள், கச்சிதமான வருணனைகள் முதலிய அவரது கதைகளுக்குத் தனிச்சோபையை அளிக்கின்றன என்றார்.

07.    தி. ஞானசேகரன் சிறுகதைகள். 30 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 2005ல் வெளியானது. 2005ம் ஆண்டில் வெளிவந்த சிறுகதைத் தொகுதிக்கான நாவேன்தன் விருதினைப் பெற்றது.

08.    புரிதலும் பகிர்தலும் (2003) அவுஸ்திரேலிய எழுத்தாளர்களுடனான நேர்காணல் 09.    அவுஸ்திரேலியப் பயணக்கதை (2002) பயண இலக்கிய தொகுதி.

டாக்டர் ஞானசேகரன் அவர்களின் எழுத்துகள் பலவழிகளிலும் முத்திரைப் பதித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. இவரது கதைகள் சமூகமயமானவை. சமூக யதார்த்தங்களை வெளிப்படுத்தக்கூடியவை. அத்துடன்,  பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணக்கூடிய வகையில் கருத்துக்களை கதை வடிவிலே முன்வைத்திருப்பது ஒரு சிறப்பம்சமாகும். 

ஞானம் சஞ்சிகை

டாக்டர் ஞானசேகரன் அவர்களின் இலக்கியப் பணிகளில் 2000ஆம் ஆண்டுக்குப் பின்பு உச்சமாகத் திகழ்வது  ஞானம் சஞ்சிகை என்றால் மிகையாகாது. பகிர்தலின் மூலம் விரிவும், ஆழமும் பெறுவது ‘ஞானம் எனும் பணிக்கூற்றுடன் தொடர்ந்து மாதந்தோறும் வெளிவரும் ஞானம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் டாக்டர் ஞானசேகரன் அவர்கள். அதன் இணையாசிரியர்: ஞானம் ஞானசேகரன்.

ஞானத்தின் முதலாவது இதழ் 2000.06.06இல் வெளிவந்தது. ஒரு சஞ்சிகையானது அந்த நாட்டின் இலக்கியப் பாரம்பரியங்கள்,  இலக்கிய உலகில் ஏற்படும் மாற்றங்கள்,  வளர்ச்சிப் போக்குகள்,  கருத்தோட்டங்கள் போன்றவற்றின் காலக் கண்ணாடியாக திகழ வேண்டும். புதிய எழுத்தாளர்கள் தோன்றி வளர வேண்டும். இக்கருத்தியலுக்கமையவே ஞானம் சஞ்சிகையின் உள்ளடக்கங்களிலும்,  செயற்பாடுகளிலும் கவனம் செலத்தி வருவது அவதானிக்க முடிகின்றது. எமது நாட்டில் சென்ற நூற்றாண்டு 60, 70கள் இலக்கிய செயற்பாடுகளில் உன்னத காலமாக விளங்கியது. முற்போக்கிலக்கியம், நற்போக்கிலக்கியம், மரபு பற்றிய சர்ச்சைகள் முன்னெடுக்கப்பட்ட காலம் அது. அக்காலகட்டத்தில் தோன்றிய சிற்றிதழ்கள் - மறுமலர்ச்சி,  கலைச்செல்வி,  மல்லிகை,  குமரன்,  இளம்பிறை,  சிரித்திரன்,  விவேகி, மரகதம், தேன் அருவி,  மலர்,  மலைமுரசு,  நதி,  அலை,  தீர்த்தக்களை,  அஞ்சலி, நந்தலாலா போன்றவையும் வேறும் சிலவும் இலக்கியப் பணி புரிந்தன.
   
எண்பதுகளில் தோன்றிய போர்ச்சூழல் காரணமாக எமது படைப்பாளிகள் பலர் நாட்டைவிட்டும் புலம்பெயர்ந்தனர். மேலும் பலர் நாட்டுக்குள்ளேயே இடம்பெயர்ந்தனர். வாழ்க்கைப் பிரச்சினைகள் பலவாயின. சுதந்திரமாக இயங்க முடியாத சங்கடம். இவை யாவும் எமது படைப்பாளிகளின் படைப்புச் செயற்பாட்டில் ஆர்வம் குறைந்த நிலைமையை தோற்றுவித்தன. வாசிப்புப் பழக்கம் இளைய தலைமுறையிடம் அருகத் தொடங்கிற்று.

ஆனாலும்,  இலக்கியச் செயற்பாடுகள் காலத்துக்குக் காலம் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டியது அவசியமானது. இன்று மிகவும் சிரமமான ஒரு சூழ்நிலையிலேயே நாம் இப்பணி யில் ஈடுபட்டுள்ளோம். முன்னைய இலக்கிய சஞ்சிகைகள் ஆற்றிய இலக்கியப் பணியின் தொடர்ச்சியைப் பேணி அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டிய நிலையில் உள்ளோம் என்ற உணர்வுடன் செயல்படுவது இன்றியமையாத தேவையாகின்றது. அந்த உணர்வுடனே நாம் செயல்பட்டு வருகின்றோம் என டாக்டர் ஞானசேகரன் அவர்கள் ஞானம் 100வது இதழில் குறிப்பிட்டிருந்தார்.

உண்மையிலேயே தற்போதைய காலசூழ்நிலையை பின்னணியாகக் கொண்டு நோக்குமிடத்து ஒரு இலக்கிய சஞ்சிகையை தொடர்ச்சியாக வெளியிடுவதில் உள்ள சிரமம் அனைவரும் அறிந்ததே. மாதந்தோறும் தவறாமல் ஞானம் சஞ்சிகையை வெளியிடுவதினூடாக ஞானசேகரன் ஒரு புதிய சாதனையைப் படைத்து வருகின்றார் என்றால் மிகையாகாது.

டாக்டர் ஞானசேகரன் அவர்களின் புகைப்படத்தை தனது முகப்பட்டையில் பிரசுரித்து 1998 அக்டோபர் கொழுந்து சஞ்சிகை கௌரவத்தை வழங்கியது. அதேபோல 1998 ஏப்ரல் அட்டைப்பட அதிதியாக மல்லிகை சஞ்சிகையும் இவரை கௌரவித்தது. இலக்கியத்தில் பல்வேறு சாதனைகளைப் புரிந்தாலும் கர்வமின்றி பழகுவதற்கு இனிமையான சுபாவமுள்ள இவரின் முகவரி:-

தி. ஞானசேகரன்
3-பி,  46ஆவது ஒழுங்கை
வெள்ளவத்தை
கொழும்பு – 06






திங்கள், 31 ஜனவரி, 2011

முருகர் செல்லையா

வடமாகாணம், யாழ்ப்பாண மாவட்டம், உடுப்பிட்டி தேர்தல் தொகுதியில் கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவில் அல்வாய் ஜே - 378 கிராமசேவகர் வசத்தில் நிரந்தரமாக வசித்து வந்த முருகர் செல்லையா ஈழத்துத் தமிழ் இலக்கியப் பரப்பில் ஒரு முதுபெரும் புலவராக விளங்கியவர். இயல்பாக கவி பாடக்கூடிய ஆற்றல்மிக்க  இவர், எழுத்துருவிலும் பல படைப்புகளை முன்வைத்துள்ளார். 1966ஆம் ஆண்டு டிசம்பர் 09ஆந் திகதி தனது 60வது வயதில் இவர் அமரத்துவமடைந்த போதிலும்கூட இவரின் தமிழ்ச் சேவைகளும்,  இலக்கியச் சேவைகளும் இன்றும் நிலைத்து நிற்கின்றன.

1906 ஆம் ஆண்டில் ஒக்டோபர் மாதம் 07ஆந் திகதி முருகர், குஞ்சரம் தம்பதியினரின் புதல்வராக அல்வாயில் பிறந்தவரே செல்லையா. இவர் யாழ்ப்பாணம், தேவரையாழி சைவ வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியைப் பெற்று பின் பலாலி ஆசிரியர்  பயிற்சிக் கலாசாலையில் பயிற்சி பெற்ற ஒரு தமிழ் ஆசானாவார். இவரின் தமிழ்மொழிப் போதனையால் யாழ் மண்ணில் பல நூற்றுக்கணக்கான சாதனைப்படைத்த நல்மாணாக்களை உருவாக்கினார். இவர்களுள் சிலர் இன்றும் சாதனையாளர்களாக வாழ்ந்து வருகின்றார்கள். ஆர்ப்பாட்டமில்லாமல் மிக அமைதியா கவும், தெளிவாகவும் போதிக்கும் கருத்துக்களை மாணாக்களின் மனங்களில் பதிய வைப்பதில் இவரின் திறமை தனித்துவமானது என்று அவர்களின் மாணாக்கள் கூறும்போது செல்லையாவின் கற்பித்தல் ஆற்றலை எடைபோடக்கூடியதாக இருக்கின்றது.

இவரின் கற்பித்தல் பாங்கில் இலக்கிய நயம் மிகைத்திருக்கும். கவி நயம் மிகைத்திருக்கும். எந்தவொரு போதனையையும் எதுகை மோனையுடன் போதிக்கும் பாங்கு இவரின் சிறப்பம்சமாகும். இலக்கிய ரீதியில் கவிஞர் செல்லையா அனுசுயா, அமுதன், முருகபூபதி ஆகிய பெயர்களில் எழுதி வந்த இவரின் அன்புப் பாரியார் செ. நாகமுத்து. இத்தம்பதியினருக்கு செ. விவேகானந்தன், செ. சபாலிங்கம், செ. பாரதி ஆகிய மூன்று அன்புச் செல்வங்களுளர். இவர்களுள் மூத்த மகனான செ. விவேகானந்தன் இறையடியெய்து விட்டார். இவரும் நாடறிந்த ஒரு நாடகக் கலைஞராவார்.

அல்வாயூரில் முதன்முறையாக ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்குச் சென்ற முதலாவது பயிற்றப்பட்ட ஆசிரியர் இவராவார். பிறப்பிலிருந்தே ஒரு தூய சைவனாக வாழ்ந்தவர். கடைசிகாலம்வரை கதாராடையை மட்டுமே அணிந்து வந்தார். கைநாடி பார்த்து நோய்க்குறிப்புச் சொல்வதில் இவர் சிறப்புமிக் கவர். அதேபோல ஜாதகம், கைரேகை போன்றவற்றைப் பார்ப் பதிலும் பிரதேசத்தில் தனித்துவமாக விளங்கி வந்தார். அல்வாயில் தற்போதும் செயற்பட்டுவரும் மனோகரா சனசமூக நிலை யத்தை ஸ்தாபித்தவரும் இவரே. சைவசமய சமரச சங்கத் தலைவராக தனது இறுதிக் காலம்வரை பணியாற்றி வந்தார். தனது 60வது வயதில் நல்லூர் ஆலய பிரவேச பேச்சுவார்த் தையில் கலந்துகொண்டிருந்த நேரத்தில் மாரடைப்பேற்பட்டு மரணமடைந்தார். 

1962ஆம் ஆண்டு ‘தங்கத் தமிழ் கண்’ எனும் கவிதைத் தொகுதி வெளிவந்தது. இக்கவிதைத் தொகுதி தமிழ் உரிமைப் போராட்ட உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடியதாக அமைந்திருந்தது. விசேடமாக சிங்கள தனிச்சட்டம் இலங்கை அரசால் அமுல்படுத்தப்பட்டிருந்த நேரத்தில் தமிழ் மக்களின் உணர்வுபூர்வமான பாதிப்புக்களை இத்தொகுதியில் இடம்பெற்றிருந்த கவிதைகளிலிருந்து காணமுடிந்தது.

இவர் ஒரு புகழ்பெற்ற தமிழ் ஆசானாகக் காணப்பட்ட மையினால் மாணாக்கரின் நலன்கருதி தான் தொழிலிருந்து ஓய்வுபெற்ற பின் ‘பாசாப் பயிற்சி’ எனும் புத்தகத்தை 1963ஆம் ஆண்டில் எழுதி வெளியிட்டார்.

இவர் உயிரோடு வாழ்ந்த காலத்தில் ‘மேலைக் கரம்பன் முருக மூர்த்தி நேர்த்திக் காரிகை’ எழுதி, குலசமாநாதன் என்பவரால் வெளியிடப்பட்ட நூலே இவரின் இறுதி நூலாகும்.

இவரின் மறைவையடுத்து இவருடைய நினைவுதினம் (09.12.1966) கலாபஞ்சாங்க சித்திரைக் கலண்டரில் புகைப்புடத்துடன் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

கவிஞர் முருகர் செல்லையா அவர்களினால் எழுதப்பட்ட ‘அம்மா வெளியே வா அம்மா’ என்ற வளர்பிறைக் கவிதைத் தொகுதியில் இடம்பெற்ற பாடல் இலங்கை அரசின் பாடத்திட்ட நூலில் இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

1982 ஆம் ஆண்டு நவம்பர் மாத மல்லிகை இதழ் இவருடைய புகைப்படத்தை அட்டைப் படத்தில் பிரசுரித்து கௌரவித்தது. ‘வாழும் பெயர்’ என்ற நினைவுக் குறிப்புரை பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் எழுதியுள்ளார்.

இவர் மறைந்தாலும் இவரின் நாமம் இன்னும் மறையவில்லை. இவர் பிறந்து வாழ்ந்து மறைந்த வீதிக்கு கவிஞர் செல்லையா வீதி என்று இன்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அல்வாயூர் சாமந்தரை ஆலடிப்பிள்ளையார் ஆலய முன்றலிலே ‘அல்வாயூர் கவிஞர் செல்லையா அரங்கு’ அமைக்கப்பட்டுள்ளது. அல்வாயூர் மனோகரன் கானசபாவினர் இன்றும் தமது ஆரம்பப் பாடலில் ‘அவனி போற்றும் கவிஞர் அல்வாயூர் செல்லை யாவை பணிவோமே பணிவோமே’ எனப் பாடி வருகின்றனர்.

 ‘இவர்கள் நம்மவர்கள்’ தொடரில் எம்மோடு வாழ்ந்து வருபவர்கள் மாத்திரமல்லாமல் எம்மோடு வாழ்ந்து தமிழுக்காகச் சேவை செய்து மறைந்த பெரியார்களினதும் விபரங்கள் பதிவாக்கப்படும். 

எம்மோடு வாழும் சமகாலத்தவர்கள் உரிய விபரங்களை தந்து ஒத்துழைப் பார்களாயின் தொடர்ந்தும் இதுபோன்ற பதிவுகள் மேற்கொள்ளப்படும். 

அமரர் முருகர் செல்லையா பற்றிய ஆதாரபூர்வமான தகவல்களையும், சான்றுகளையும் தந்துதவிய அல்வாய் தெற்கு பொன்மங்கலவாசம் சகோதரி வீ. சிவமணி அவர்களுக்கு விசேட நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.