திங்கள், 31 ஜனவரி, 2011

முருகர் செல்லையா

வடமாகாணம், யாழ்ப்பாண மாவட்டம், உடுப்பிட்டி தேர்தல் தொகுதியில் கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவில் அல்வாய் ஜே - 378 கிராமசேவகர் வசத்தில் நிரந்தரமாக வசித்து வந்த முருகர் செல்லையா ஈழத்துத் தமிழ் இலக்கியப் பரப்பில் ஒரு முதுபெரும் புலவராக விளங்கியவர். இயல்பாக கவி பாடக்கூடிய ஆற்றல்மிக்க  இவர், எழுத்துருவிலும் பல படைப்புகளை முன்வைத்துள்ளார். 1966ஆம் ஆண்டு டிசம்பர் 09ஆந் திகதி தனது 60வது வயதில் இவர் அமரத்துவமடைந்த போதிலும்கூட இவரின் தமிழ்ச் சேவைகளும்,  இலக்கியச் சேவைகளும் இன்றும் நிலைத்து நிற்கின்றன.

1906 ஆம் ஆண்டில் ஒக்டோபர் மாதம் 07ஆந் திகதி முருகர், குஞ்சரம் தம்பதியினரின் புதல்வராக அல்வாயில் பிறந்தவரே செல்லையா. இவர் யாழ்ப்பாணம், தேவரையாழி சைவ வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியைப் பெற்று பின் பலாலி ஆசிரியர்  பயிற்சிக் கலாசாலையில் பயிற்சி பெற்ற ஒரு தமிழ் ஆசானாவார். இவரின் தமிழ்மொழிப் போதனையால் யாழ் மண்ணில் பல நூற்றுக்கணக்கான சாதனைப்படைத்த நல்மாணாக்களை உருவாக்கினார். இவர்களுள் சிலர் இன்றும் சாதனையாளர்களாக வாழ்ந்து வருகின்றார்கள். ஆர்ப்பாட்டமில்லாமல் மிக அமைதியா கவும், தெளிவாகவும் போதிக்கும் கருத்துக்களை மாணாக்களின் மனங்களில் பதிய வைப்பதில் இவரின் திறமை தனித்துவமானது என்று அவர்களின் மாணாக்கள் கூறும்போது செல்லையாவின் கற்பித்தல் ஆற்றலை எடைபோடக்கூடியதாக இருக்கின்றது.

இவரின் கற்பித்தல் பாங்கில் இலக்கிய நயம் மிகைத்திருக்கும். கவி நயம் மிகைத்திருக்கும். எந்தவொரு போதனையையும் எதுகை மோனையுடன் போதிக்கும் பாங்கு இவரின் சிறப்பம்சமாகும். இலக்கிய ரீதியில் கவிஞர் செல்லையா அனுசுயா, அமுதன், முருகபூபதி ஆகிய பெயர்களில் எழுதி வந்த இவரின் அன்புப் பாரியார் செ. நாகமுத்து. இத்தம்பதியினருக்கு செ. விவேகானந்தன், செ. சபாலிங்கம், செ. பாரதி ஆகிய மூன்று அன்புச் செல்வங்களுளர். இவர்களுள் மூத்த மகனான செ. விவேகானந்தன் இறையடியெய்து விட்டார். இவரும் நாடறிந்த ஒரு நாடகக் கலைஞராவார்.

அல்வாயூரில் முதன்முறையாக ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்குச் சென்ற முதலாவது பயிற்றப்பட்ட ஆசிரியர் இவராவார். பிறப்பிலிருந்தே ஒரு தூய சைவனாக வாழ்ந்தவர். கடைசிகாலம்வரை கதாராடையை மட்டுமே அணிந்து வந்தார். கைநாடி பார்த்து நோய்க்குறிப்புச் சொல்வதில் இவர் சிறப்புமிக் கவர். அதேபோல ஜாதகம், கைரேகை போன்றவற்றைப் பார்ப் பதிலும் பிரதேசத்தில் தனித்துவமாக விளங்கி வந்தார். அல்வாயில் தற்போதும் செயற்பட்டுவரும் மனோகரா சனசமூக நிலை யத்தை ஸ்தாபித்தவரும் இவரே. சைவசமய சமரச சங்கத் தலைவராக தனது இறுதிக் காலம்வரை பணியாற்றி வந்தார். தனது 60வது வயதில் நல்லூர் ஆலய பிரவேச பேச்சுவார்த் தையில் கலந்துகொண்டிருந்த நேரத்தில் மாரடைப்பேற்பட்டு மரணமடைந்தார். 

1962ஆம் ஆண்டு ‘தங்கத் தமிழ் கண்’ எனும் கவிதைத் தொகுதி வெளிவந்தது. இக்கவிதைத் தொகுதி தமிழ் உரிமைப் போராட்ட உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடியதாக அமைந்திருந்தது. விசேடமாக சிங்கள தனிச்சட்டம் இலங்கை அரசால் அமுல்படுத்தப்பட்டிருந்த நேரத்தில் தமிழ் மக்களின் உணர்வுபூர்வமான பாதிப்புக்களை இத்தொகுதியில் இடம்பெற்றிருந்த கவிதைகளிலிருந்து காணமுடிந்தது.

இவர் ஒரு புகழ்பெற்ற தமிழ் ஆசானாகக் காணப்பட்ட மையினால் மாணாக்கரின் நலன்கருதி தான் தொழிலிருந்து ஓய்வுபெற்ற பின் ‘பாசாப் பயிற்சி’ எனும் புத்தகத்தை 1963ஆம் ஆண்டில் எழுதி வெளியிட்டார்.

இவர் உயிரோடு வாழ்ந்த காலத்தில் ‘மேலைக் கரம்பன் முருக மூர்த்தி நேர்த்திக் காரிகை’ எழுதி, குலசமாநாதன் என்பவரால் வெளியிடப்பட்ட நூலே இவரின் இறுதி நூலாகும்.

இவரின் மறைவையடுத்து இவருடைய நினைவுதினம் (09.12.1966) கலாபஞ்சாங்க சித்திரைக் கலண்டரில் புகைப்புடத்துடன் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

கவிஞர் முருகர் செல்லையா அவர்களினால் எழுதப்பட்ட ‘அம்மா வெளியே வா அம்மா’ என்ற வளர்பிறைக் கவிதைத் தொகுதியில் இடம்பெற்ற பாடல் இலங்கை அரசின் பாடத்திட்ட நூலில் இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

1982 ஆம் ஆண்டு நவம்பர் மாத மல்லிகை இதழ் இவருடைய புகைப்படத்தை அட்டைப் படத்தில் பிரசுரித்து கௌரவித்தது. ‘வாழும் பெயர்’ என்ற நினைவுக் குறிப்புரை பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் எழுதியுள்ளார்.

இவர் மறைந்தாலும் இவரின் நாமம் இன்னும் மறையவில்லை. இவர் பிறந்து வாழ்ந்து மறைந்த வீதிக்கு கவிஞர் செல்லையா வீதி என்று இன்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அல்வாயூர் சாமந்தரை ஆலடிப்பிள்ளையார் ஆலய முன்றலிலே ‘அல்வாயூர் கவிஞர் செல்லையா அரங்கு’ அமைக்கப்பட்டுள்ளது. அல்வாயூர் மனோகரன் கானசபாவினர் இன்றும் தமது ஆரம்பப் பாடலில் ‘அவனி போற்றும் கவிஞர் அல்வாயூர் செல்லை யாவை பணிவோமே பணிவோமே’ எனப் பாடி வருகின்றனர்.

 ‘இவர்கள் நம்மவர்கள்’ தொடரில் எம்மோடு வாழ்ந்து வருபவர்கள் மாத்திரமல்லாமல் எம்மோடு வாழ்ந்து தமிழுக்காகச் சேவை செய்து மறைந்த பெரியார்களினதும் விபரங்கள் பதிவாக்கப்படும். 

எம்மோடு வாழும் சமகாலத்தவர்கள் உரிய விபரங்களை தந்து ஒத்துழைப் பார்களாயின் தொடர்ந்தும் இதுபோன்ற பதிவுகள் மேற்கொள்ளப்படும். 

அமரர் முருகர் செல்லையா பற்றிய ஆதாரபூர்வமான தகவல்களையும், சான்றுகளையும் தந்துதவிய அல்வாய் தெற்கு பொன்மங்கலவாசம் சகோதரி வீ. சிவமணி அவர்களுக்கு விசேட நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக